கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு அரசு பழப் பண்ணைக்கு செல்லும் சாலை மிகவும் ஆபத்து வாய்ந்ததாகவும், பண்ணைக்குள் குரங்குகள் தொந்தரவு செய்வதாகவும் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு அரசு பழப் பண்ணைக்கு செல்லும் சாலை மிகவும் ஆபத்து வாய்ந்ததாகவும், பண்ணைக்குள் குரங்குகள் தொந்தரவு செய்வதாகவும் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது.

இப்பண்ணையில் பலா, மங்குஸ்தான், துரியன், லிச்சி, லாங்சாட், ரம்பூட்டான், மாதுளை, கொய்யா, பப்ளிமாஸ், பன்னீர் கொய்யா போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும், இப்பண்ணை உள்ளூர் வாசிகளுக்கும், உதகை செல்வோருக்கும் சிறந்த சுற்றுலாப் தளமாக விளங்குகிறது.

இப்பண்ணைக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் வரை வந்து செல்கிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 500 முதல் 1000 பேர் வரை வந்து செல்கின்றனர்.
உதகை செல்லும் சாலையில், முதல் கொண்டை ஊசி வளைவு அருகே இடது புறமாக திரும்பி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பழப் பண்ணைக்கு செல்ல வேண்டும். அந்த வழியானது அருகில் உள்ள பள்ளத்தாக்குகளை ஒட்டி செல்கிறது. நான்கு சக்கர வாகனங்களில் சிறிய ரகமும், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அவ்வழியாகச் செல்ல முடியும்.

இதனிடையே, பள்ளத்தாக்குகளை ஒட்டி செல்லும் வழியானது எந்த வித தடுப்புகளும் இல்லாமல் உள்ளது. சாலையானது முற்றிலும் சீர்குலைந்து, மண் சாலையாக காட்சியளிக்கிறது.

இது குறித்து சுற்றுலாப் பயணி மு.சுரேஷ் என்பவர் கூறுகையில், "பழப் பண்ணைக்கு செல்லும் சாலையில் பள்ளத்தாக்கு அருகே ஒரு வளைவு உள்ளது. மிகவும் சிறிய வளைவு அதில் வாகனம் திரும்பும் போது பல அடி உள்ள பள்ளத்தாக்கில் விழ வாய்ப்புள்ளது.

சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் பேருந்துகள் வர வாய்ப்பில்லை. சாலைகளை சீரமைத்து முறைப்படுத்தினால் உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகள் வர வசதியாக இருக்கும்." என்றார்.

அதே போல் பழப் பண்ணையில் குரங்குகளின் சேட்டை அதிகமாக காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் மீது ஏறி சேதப்படுத்துகின்றன. அவர்கள் கொண்டு வரும் தின்பண்டங்களை பிடுங்கி சாப்பிட நினைக்கும் குரங்குகள் மக்களை தாக்கவும் முயற்சி செய்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர் வை. குடியரசு கூறுகையில், "குரங்குகள் பெரும்பாலும் மரத்தில் உள்ள பலாப்பழங்களை சாப்பிட வருகிறது. அது சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மீது ஏறி அவர்களையும் மிரட்டுகின்றது. குரங்குகளை கண்டு பெண்களும், குழந்தைகளும் அச்சமடைகின்றனர். குரங்களின் தொல்லைகளை தடுக்க பண்ணை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

விவசாயிகளுக்குத் தேவையான பாக்கு மர நாற்றுகளும், காபி, கோ-கோ மொட்டு கட்டிய செடிகளும், பல்வேறு பழ, வாசனை திரவிய, மலர் அலங்கார செடி, பழ வகை செடிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனை வாங்கிச் செல்ல விவசாயிகளும் வருகின்றனர். ஆனால், பெரிய வாகனங்கள் உள்ளே வரமுடியாத காரணத்தால் குறைந்த அளவில் மட்டுமே நாற்றுகள் வாங்கிச் செல்ல முடிகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வரும் பழனியப்பன் கூறுகையில், "நாற்றுகள் அதிகமாக வாங்கி வெளியூர் விவசாயிகளுக்கு அனுப்பலாம். ஆனால், அதனை எடுத்து உதகை சாலை வருவதற்கு பெரிய வாகனங்களால் வர முடியாது. சிறிய ரக டாட்டா ஏஸ், போன்ற வாகனம் தான் வர முடியும். நாற்றுகள் அதிக அளவில் விற்பனையானால் அது பழப் பண்ணைக்குத் தான் லாபம்" என்றார்.
இப்பண்ணையில் மருத்துவக் குணம் கொண்ட அரிய வகை துரியன் பழங்களும் உள்ளன. இப்பழங்கள் கல்லாறு அரசு பழப் பண்ணை மற்றும் பர்லியாறு அரசு பழப் பண்ணையில் விளைவிக்கப்படுகிறது. கல்லாறு, பர்லியாறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட துரியன் மரங்கள் உள்ளன. கல்லாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் ஆண்டு முழுவதும் சீரான சீதோஷண நிலை நிலவி வருவதால் துரியன் பழ மரங்கள் நன்கு வளர்கின்றன.
துரியன் பழங்களின் சீசன் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையாகும். இப்பழம் கிலோ ரூ. 650 முதல் ரூ. 750 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கவும் மக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இதனிடையே மக்கள் அதிகம் வரும் கல்லாறு பழப் பண்ணைக்கு சாலையை சீரமைத்து, தடுப்புகள் வைத்து பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இது குறித்து கல்லாறு அரசு பழப் பண்ணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "சாலைகளை சீரமைக்க கோரி கூறியுள்ளோம். இது குறித்து உயர் அதிகாரிகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார்கள்." என்றார்.