கோவை: கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின் பேரில் மேலும் 126 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின் பேரில் மேலும் 126 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 6-ம் தேதி அதிகாலை கோவை மாநகர தனிப்படை போலீசார் இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் கிடைத்த தகவலின் பேரில், திருநெல்வேலியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் (TN 66 E 49 33) என்ற வாகனத்தில் வந்த ஜப்பாரின் மகன் ரசூல் முகைதீனை (43) போலீசார் சோதனை செய்து விசாரித்தனர்.
இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் ரசூலிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் கோவையில் உள்ள கே.ஜி ஹாஸ்பிடல் அருகே வாகனத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.
அதேபோல சென்னை, மதுரை, கோவை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து கடந்த 12-ம் தேதி ரசூல் முகைதீன் மற்றும் இசக்கி பாண்டி ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
பின்னர் ரசூல் முகைதீன் கூட்டாளிகளான துரை, மைதீன் ஆகியோரை கடந்த 16-ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர்.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் திருடிய 40 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 126 இரண்டு சக்கர வாகனங்களை தனிப்படை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை கோவை குற்றவியல் நடுவர் வேலுச்சாமி முன்பு நேற்று ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து இரு சக்கர வாகனங்களை மீட்ட தனிப்படை போலீசாரை கோவை மாநகர காவல் ஆணையர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.