கோவை : தடாகம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த யானைகளை சிறைபிடிக்குமாறு விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : தடாகம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த யானைகளை சிறைபிடிக்குமாறு விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காட்டு யானைகள் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இதனால், ஏற்படும் மனித-விலங்கு மோதல்களால், உயிர் பலியும் ஏற்படுகிறது. குறிப்பாக, சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு யானைகள்தான் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரி ஒருவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது.
இதனால், காட்டு யானைகளின் தொந்தரவை முறியடிக்கும் விதமாக, முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட பொம்மன் மற்றும் விஜய் ஆகிய கும்கி யானைகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டன. மேலும், சேரன், ஜான் ஆகிய இரு கும்கி யானைகள், காட்டு யானைகளை விரட்டுவதற்காக இன்று வரப்பாளையத்திற்கு அழைத்து வரப்பட்டது.

இதனிடையே, காட்டு யானைகளை விரட்டுவதற்காக வனத்துறையினர் கும்பி யானைகளைப் பயன்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு, #Save சின்னதம்பி, #Save விநாயகன் ஆகிய வாசகங்கள் அடங்கிய பிரச்சாரத்தை முன்வைத்து தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்களையும் ஒட்டியுள்ளனர். மேலும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் இந்த ஆபரேசனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகளுக்கு அழுத்தம் ஏற்படுவதாகவும், இந்தப் பணிகளின் போது சம்பந்தப்பட்ட காட்டு யானைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்படுவதுடன், சில சமயம் உயிரையும் இழக்கும் அபாயம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த #Save சின்னதம்பி போஸ்டர்கள் விவசாயிகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் வரப்பாளைய முகாமிற்குச் சென்ற விவசாயிகள் காட்டு யானைகளை சிறைபிடிக்குமாறு வலியுறுத்தினர்.

"இந்தக் காட்டு யானைகளால் விவசாயிகள் இரவில் உறக்கத்தை கெடுத்தும், இழப்புகளை சந்தித்தும் வருகின்றனர். நாங்கள் காட்டு யானைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், இந்த யானைகளால் தொடர்ந்து எங்களின் வாழ்வாதாரத்தை இழக்க முடியாது," என்கின்றனர் விவசாயிகள்.