கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் முன்பு விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி ஒத்திகை சம்பவம் பொதுமக்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் முன்பு விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி ஒத்திகை சம்பவம் பொதுமக்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீர் சாலை விபத்துகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால் உயிர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது அந்த குறிப்பிட்ட நேரத்தில் அனைவருக்குமே ஒரு பதட்டமான சூழலை உருவாக்கி விடும்.
அந்த நேரத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும். மருத்துவர்கள் எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும். அவசரங்களில் என்ன தவறுகள் நேரும், அதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் முன்பு ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மருத்துவக் குழுவினர் சாலை விபத்துக்கள் ஏற்பட்டது போல மிக தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

இதில், தனியார் கல்லூரி வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்தவர்களும், இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி வந்த நபர் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது போல ஆடைகள் மற்றும் ரத்த காயங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன. இந்த விபத்து குறித்து ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு தகவல் வந்தவுடன் காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது போலவும் நடித்தனர்.
அதேபோல, விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவர்களை மருத்துவக் குழுவினர் எப்படி கையாள வேண்டும், சாலையில் எப்படி கொண்டு சென்று சரியான நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கவும் ஒத்திகைகள் பார்த்தனர். இந்த நிகழ்ச்சி மருத்துவர்களுக்கான ஒத்திகையாக மட்டும் அல்லாமல், சாலை விபத்து ஏற்பட்டால் போலீசார் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வாகவும் இருந்தது.
மேலும், இந்த சாலை விபத்து ஏற்பட்டது போன்ற சித்தரிப்பு திடீரென நடைபெற்றதால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உண்மையான தகவல் தெரிந்தவுடன் தான் நிம்மதியடைந்தனர். அதேபோல, இந்த திடீர் நிகழ்வு வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களில் பெரிய விபத்து ஏற்பட்டது போல தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.