திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்கின் மேலாளரை அ.தி.மு.க.,வினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்கின் மேலாளரை அ.தி.மு.க.,வினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபாவளியன்று வெளியான சர்கார் திரைப்படம் அ.தி.மு.க.,வினரை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்து இருப்பதாக கூறி அக்கட்சியினர், படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க.,வினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் மற்றும் படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள தேனாண்டாள் நிறுவனம் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மூவரும் கலந்தாலோசித்து படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை இன்று பிற்பகல் முதல் நீக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதலே பல்வேறு திரையரங்குகளின் முன்பாக அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.வி.ஆர் திரையரங்கம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பிற்பகல் காட்சி திரையிடப்படவிருந்த நிலையில் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என திரை அரங்கின் முன்பாக இருந்த பேனர்களை கிழித்தெறிந்தனர். மேலும், திரை அரங்கினுள் நுழைந்து திரையரங்கின் மேலாளரை தாக்கினர்.

இதன் காரணமாக இன்று திரையிடப்படவிருந்த 10 காட்சிகளும் எஸ்.வி.ஆர் திரையரங்கில் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அந்த திரையரங்கின் முன்னதாக குழுமினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. திரையரங்கின் மேலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தின் காரணமாக அதே பகுதியில் அமைந்துள்ள சந்தியா என்ற மற்றொரு திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.