கோவை : சர்க்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் முருகதாஸை கைது செய்யக் கோரி கோவை சாந்தி திரையரங்கு அருகே அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கோவை : சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் முருகதாஸை கைது செய்யக் கோரி கோவை சாந்தி திரையரங்கு அருகே அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கடந்த தீபாவளியன்று நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்க்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், ஆளும் கட்சியிடையே கடும் எதிர்ப்பை சம்பாரித்துள்ளது. இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. சர்கார் படத்தில் பழ.கருப்பையா முதலமைச்சராக வருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் போல ராதா ரவியின் கதாபாத்திரம் அமைச்சராக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரிடமும் விஜய் காரசாரமாக அரசியல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசின் மின்சார துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணி துறை ஆகியவற்றை சரமாரியாக விமர்சிக்கும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு கொளுத்தும் காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், சர்க்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் முருகதாஸை கைது செய்யக் கோரி கோவை சாந்தி திரையரங்கு அருகே அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 25 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் ஒருதலை பட்சமாக தி.மு.க.,விற்கு சாதகமாகக் காட்டப்பட்டு உள்ளதாகவும், அ.தி.மு.க.,விற்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் பொதுமக்கள் மிக்ஸி ஃபேன்களை போட்டு உடைப்பது போல் காட்சி அமைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது எனக் கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், தொலைக்காட்சியை போட்டு உடைப்பதாக ஏன் காண்பிக்கப்படவில்லை எனில், இது சன் பிக்சர்ஸ் படம் என்பதாலேயே ஒருதலை பட்சமாக காண்பிக்கப்பட்டு உள்ளதாகவும், .உடனடியாக படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். அ.தி.மு.க.விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் படத்தை எடுத்துள்ள இயக்குனர் முருகதாஸை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திரையங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த சர்க்கார் பட பேனரை கிழித்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.
சர்கார் திரைப்படத்திற்கு மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சர்கார் படத்தை தடை செய்யக்கோரி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.
