கோவை : கோவை மாநகரில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசுகள் வெடித்ததாக மாநகர போலிசார் 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கோவை : கோவை மாநகரில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசுகள் வெடித்ததாக மாநகர போலிசார் 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி வெடிப்பவர்கள் மீது தமிழகம் முழுவதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாநகரில் மட்டும் தற்போது 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சுங்கம் காமராஜர் இரண்டாவது வீதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பார்த்திபன் (20). இவர் நேற்று இரவு அதே பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகே குடியிருக்கும் விக்டோரியா(48) என்பவர் விதியை மீறி பட்டாசு வெடிக்கலாமா என கேட்டார். ஆனால் பார்த்திபன் சரியான பதில் சொல்லாததால் விக்டோரியா ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்திய தண்டனை சட்டம் 188ன் கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்துள்ளனர்.

மேலும், விமல் என்பவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள குட்டை பார்க் அருகே பட்டாசு வெடித்ததிற்காக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல, புளியகுளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் பந்தய சாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் பட்டாசு வெடித்துள்ளதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல, பந்தய சாலை போலீசார் சாந்தி தியேட்டர் அருகே உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன், சிவகங்கையைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் பட்டாசு வெடித்தற்காக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது பொது பணியாளரால் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, அனுமதியின்றி கூடுதல், பொது இடத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் விதிகள் மீறி பட்டாசுகள் வெடித்ததாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக மாவட்ட காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.