திருப்பூர் : பல்லடம் அருகே பூட்டிய வீட்டில் பிளாஸ்டிக் டிரம்மில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : பல்லடம் அருகே பூட்டிய வீட்டில் பிளாஸ்டிக் டிரம்மில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் அருகே கிரிச்சிபாளையம் பகுதியைச் சேரந்தவர் விவசாயி ராமசாமி (60). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் மற்றொரு வீடு உள்ளது. இந்த வீட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக செந்தில் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் கூலித்தொழிலாளியான செந்தில் தனது மனைவி சித்ரா ஒரு பெண்குழந்தை ஆகியோருடன் குடியிருந்து வந்துள்ளார் இந்த நிலையில், கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு செந்தில் குடும்பத்துடன் வெளியூருக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக வாடகையும் தராமல், பொருட்களையும் எடுக்காமல் வீட்டையும் பூட்டிச் சென்றுவிட்டதால் வீட்டின் உரிமையாளர் ராமசாமி, செந்திலைத் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ராமசாமியைத் தொடர்பு கொண்டு வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளார். இதையடுத்து, பூட்டிய வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு குடியிருந்து கொள்ளுமாறு ராமசாமி கூறியுள்ளார். அதன்படி, பிரகாஷ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து சுத்தம் செய்தபோது தண்ணீர் நிரப்பிவைக்கும் டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்து அருகே சென்று பார்த்துள்ளார்.

அப்போது, மணல் நிரப்பப்பட்ட டிரம்மில் அழுகிய நிலையில், பெண் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து வீட்டின் உரிமையாளர் ராமசாமிக்கும் காமநாய்க்கன்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், டிரம்மில் அடையாளம் தெரியாத நிலையில் மிகவும் அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை செய்யப்பட்டு டிரம்மில் மணலால் மூடிய நிலையில் இருந்த பெண் யார்...?, எந்த ஊரைச்சேர்ந்தவர்...? ,பெண்ணைக் கொலை செய்தது யார்..? எதற்காக இக்கொலை நடைபெற்றது..? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இந்த வீட்டில் குடியிருந்த செந்திலைப் பிடித்து விசாரித்த பின்னரே இக்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பல்லடம் அருகே பூட்டிய வீட்டில் இருந்த டிரம்மில் பெண்ணின் சடலம் மீட்க்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
