கோவை : தமிழகத்திலிருந்து கிராண்ட் நெய்ன் (grand naine) ரக வாழைப்பழங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம், தமிழக வாழை விவசாயிகள் பெரிதும் பயனடைவதுடன், பலரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை : தமிழகத்திலிருந்து கிராண்ட் நெய்ன் (grand naine) ரக வாழைப்பழங்களை ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம், தமிழக வாழை விவசாயிகள் பெரிதும் பயனடைவதுடன், பலரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் 96, 400 ஹெக்டர் நிலத்தில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் 19, 600 ஹெக்டர் நிலத்தில் வாழை விவசாயம் நடைபெறுகிறது. 1 ஹெக்டருக்கு 38.32 மெட்ரிக் டன் வாழைப்பழங்கள் உற்பத்தியாகின்றன. இதன்மூலம் , இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கில் வாழை தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது.

இதனிடையே, தமிழகத்தில் பாரம்பரிய ரகமான செவ்வாழை, நெய்பூவன், நேந்திரன், நாட்டுப் பழம் உள்ளிட்டவை கடந்த 2009 -ம் ஆண்டு வரை மிகவும் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்தன. இதன்மூலம் ஏக்கருக்கு நிகர லாபம் ரூ. 50 ஆயிரம் கிடைத்தது.
அதன் பின்னர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை உதவியுடன் நவீன தொழில்நுட்பங்கள் மூலம், அதாவது திசு வளர்ப்பு, சொட்டு நீர் பாசனம், வாழை பழத்திற்கென பிரத்தியேக கவனம் செலுத்தி பழுக்க வைக்கும் கூடம், பதப்படுத்தும் மையம் என அறிவியல் ரீதியிலான விவசாயம் செய்து தேனி மாவட்ட விவசாயிகள் வாழை உற்பத்தியில் புரட்சி செய்தனர். இதனால், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ரூ.50 ,000 முதல் ரூ. 3 லட்சம் வரை அதாவது 6 மடங்கு லாபம் விவசாயிகள் ஈட்டினர்.

இதன் தொடர்ச்சியாக, இத்தாலி நாட்டைச் சார்ந்த போர்ட் ஆப் திரிஸ்ட்ஸ் (port of Trieste)நிதியுதவிடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வாழை கூட்டமைப்பு இணைந்து 'கம்பி வட கத்தி' (cable way conveyor system) என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அறுவடை செய்த வாழைத்தாரினை தோட்டத்திலிருந்து சிப்பம் கட்டி, பதப்படுத்தும் கூடம் வரை எந்தவித சேதாரம் இல்லாமல் எடுத்து செல்ல முடியும். அதன் பின் பேக்கிங் செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
இது குறித்து தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர் ஏ.பி. கருப்பையா கூறுகையில், "ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உள்ளது என்பதில் எந்தவித ஐயமுமில்லை. முதல்முறையாக கம்பி வட கத்தி முறையைப் பயன்படுத்தி 400 கிலோ கிராண்ட் நெய்ன் வாழைக்காய்களை இத்தாலியில் உள்ள யுதின் (university of Udine) பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு, சாதகமான முடிவுகள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் 1-ம் தேதி 21 டன் வாழைக்காய்களை கொச்சின் துறைமுகத்திலிருந்து கடல் மார்க்கமாக இத்தாலியில் உள்ள திரிஸ்ட்டி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது. இது இனி வரும் காலங்களில் பலநூறு டன் வாழைக்காய்களாக அதிகரிக்கப்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்," என்றார்.
இந்த ஏற்றுமதி மூலம் வாழை விவசாயிகளுக்குக் கிலோவிற்கு கூடுதலாக ரூ. 5 வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பு, பொருளாளர் அஜிதன் கூறுகையில், "இந்த ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு 20 கிலோவிற்கு சுமார் 8.2 டாலர் வருமானம் கிடைக்கும். இதனால், தற்போது விவசாயிகளுக்கு கூடுதலாக கிலோவிற்கு ரூ. 3 முதல் ரூ. 5 வரை வருமானம் கிடைக்கும். டாலரின் விலை பொறுத்து லாபங்களில் மாற்றம் வரும்," என்றார்.
கிராண்ட் நெய்ன் வாழைக்காய்கள் அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை நெறிமுறைகளுடன் அறுவடை செய்யப்பட்டு, ஏற்றுமதிக்கு உகந்த தரத்தில் பேக்கிங் செய்யப்பட்டு கண்டெய்னரில் மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்படுகின்றன. இதனால், வாழை விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து பிரிவுகளிலும் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை ஆணையர், ஷன்சோகம் ஜடக் சிரு (Shunchonngam Jadak Chiru) கூறுகையில், "தமிழக அரசு வேளாண்துறையில் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதிதான் ஐரோப்பிய நாடுகளுக்கு வாழைக்காய்கள் ஏற்றுமதி செய்வதாகும். இந்தியாவிலேயே ஐரோப்பிய நாடுகளுக்கு நாம் தான் முதல் முதலாக வாழைக்காய்களை ஏற்றுமதி செய்கிறோம். இதன்மூலம் மிகப்பெரிய தொழிற்புரட்சி ஏற்படும் பலரும் பயனடைவார்கள்," என்றார்.
இது போன்ற ஏற்றுமதிகள் மூலம் வரும்காலத்தில் விவசாயிகள் தொடர்ந்து பயனடைய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.