உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையில், தமிழ் மொழி பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையில், தமிழ் மொழி பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும், இந்த சிலைக்கு ‘statue of unity’, அதாவது 'ஒற்றுமையின் சிலை' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் statue of unity என்ற சிலையின் பெயர் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிபெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. statue of unity என்ற ஆங்கில வார்த்தையை ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். தமிழ்மொழியை இழிவுபடுத்தும் விதமாக இருக்கும் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், statue of unity என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிபெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் என ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தமிழ் மொழிபெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதனை தற்காலிகமாக மறைத்து உள்ளனர். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட உலகின் மிக உயரமான சிலையில் தமிழ்மொழியின் மொழிபெயர்ப்பு மோசமான நிலையில் இருப்பது, தமிழை வஞ்சிக்கும் பார்வையை வெளிப்படுத்துவதாகக் கருத்துக்களும், கண்டனங்களும் கூறப்படுகிறது.