கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி தயார் செய்யப்படும் ஸ்வீட்ஸ் மற்றும் காரம் போன்றவற்றின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறையின் சிறப்புக் குழுக்கள் கோவையில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி தயார் செய்யப்படும் ஸ்வீட்ஸ் மற்றும் காரம் போன்றவற்றின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறையின் சிறப்புக் குழுக்கள் கோவையில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஸ்வீட்ஸ் கடைகளில் ஸ்வீட்ஸ், காரம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஸ்வீட்ஸ், காரம் உள்ளிட்டவை தரமாக உள்ளதா..?, கூடுதல் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா..?, பயன்படுத்திய ஆயில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா..? உள்ளிட்டவை குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவையில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வுகள் நடத்த திட்டமிட்ட அதிகாரிகள், முதற்கட்டமாக டவுன்ஹால் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறியதாவது:- இனிப்பு, கார வகைகள் தரமானதாக செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. சமையல் செய்யும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய்மையான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைக்கக் கூடாது. இனிப்பு, காரம் தயாரித்த பாத்திரங்களை சுத்தமாக கழுவ வேண்டும். தயாரிப்பவர்கள், பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபடும் நபர்கள் கைகள், தலையில் உறைகளை அணிய வேண்டும்.
பேக்கிங்கில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு எண் உள்ளிட்டவை இருக்க வேண்டும். கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி இனிப்பு, காரம் தயாரிப்பு குறித்து கண்காணிக்க 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், உணவு தரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வார்கள். ஸ்வீட்ஸ், காரம் போன்றவற்றை வாங்கும் போது பொதுமக்களுக்கு கவனம் தேவை. ஏதேனும் புகார்கள் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் தெரிவிக்கலாம், இவ்வாறு அவர் கூறினார்.