கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு வழிப்பாதையில் வந்த 108 ஆம்புலன்ஸ் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதியதில் கணவன்-மனைவி விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை: சிங்காநல்லூர் குளத்தேரி அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு வழிப்பாதையில் வந்த 108 ஆம்புலன்ஸ் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதியதில் கணவன்-மனைவி விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவை வந்ததையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதனால் கோவை நகரம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதேபோல, முதலமைச்சருக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் இருந்ததால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஒன்று திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது ஒரு வழிச் சாலையில் வந்து மோதிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில், மாரியப்பன்(46) அவரது மனைவி பத்மினி(40) மற்றும் அவரது மகன் மேக விக்ரம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூரில் இருந்து குளத்தேரி வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கோவை அரசு மருத்துவமனையில் இருந்து காங்கயம் நோக்கி சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசல் காரணமாக திருச்சி சாலையில் உள்ள பெர்க்ஸ் ஸ்கூல் ஆர்ச்சின் எதிர்புறம் பகுதியிலிருந்து காவல் துறையின் அனுமதியுடன் ஒரு வழிப்பாதையில் அனுப்பப்பட்டது.
அப்படி ஒரு வழிப்பாதையில் சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் குளத்தேரி அருகே உள்ள பிளாக் மாரியம்மன் கோயில் அருகே வரும் போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது லேசாக உரசியதில் கீழே விழுந்தார்.
கீழே விழுந்த அவர் சிறு காயங்களுடன் தப்பினார். ஆனால், எதிர்பாராத விதமாக கணவன்-மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் ஒன்வேயில் வரும் வாகனத்தின் வலது பக்கத்தில் சென்றுவிடலாம் என நினைத்து ஓட்டியபொழுது திடீரென ஆம்புலன்ஸ் அவர் மீது மோதியது.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த மாரியப்பனுக்கு முகம் மற்றும் தலை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

பின்பகுதியில், அமர்ந்திருந்த அவரது மகனுக்கு சிறு கீறல்களும், மனைவிக்கு தலையில் லேசான காயமும் ஏற்பட்டது.
பின்னர் அதே ஆம்புலன்சில் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைத்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது கோவை அரசு மருத்துவமனையில் கணவன் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாரியப்பனுக்கு தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு(கிழக்கு) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் TN 20 G 1593, என்ற 108 ஆம்புலன்ஸ் காங்கயம் அரசு மருத்துவ மனையில் இருந்து நோயாளியை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வெள்ளக்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது விபத்து ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.