கோவை : பச்சை பட்டாணியில் சாயம் ஏற்றப்படுவதாக அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாநகர பகுதி முழுவதும் சோதனை நடத்தி சாயம் ஏற்றப்பட்ட பட்டாணிகளை பறிமுதல் செய்தனர்.
கோவை : பச்சை பட்டாணியில் சாயம் ஏற்றப்படுவதாக அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாநகர பகுதி முழுவதும் சோதனை நடத்தி சாயம் ஏற்றப்பட்ட பட்டாணிகளை பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாக்கெட் பட்டாணிகளில் (இன்ஸ்டெண்ட்) பச்சை நிற சாயம் ஏற்றப்படுவதாக சிம்ப்ளிசிட்டி நேயர்கள் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகாரை, தமிழக உணவு பாதுகாப்புத்துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு கொண்டு சென்றோம். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை மாநகர பகுதிகளில் அதிரடி ஆய்வை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

அதன்படி, உணவு பாதுகாப்புத்துறையின் தமிழக ஆணையர் அமுதா உத்தரவின் பேரில், கோவை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில், காமராஜ், விஜயராஜ், மகாராஜன், சுப்புராஜ் மற்றும் ரங்கராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலை முதலே ஆய்வில் இறங்கினர்.
மாநகரின் பல்வேறு பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி ஆய்வில், 6.1 கிலோ அளவிலான சாயம் ஏற்றப்பட்ட பட்டாணிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை நமக்கு அளித்த பேட்டியில், "இந்த வகை பட்டாணி கெட்டுப் போகக்கூடிய பொருள் என்பதால், இதனை ஒரே நாளில் அதிக அளவில் உற்பத்தி செய்வதில்லை என்று தெரியவந்துள்ளது. அதோடு, அந்தந்த நாட்களுக்கு தேவையான அளவை மட்டும் எடுத்து அதில் 'கிரீன் ஆப்பிள்' என்று கூறப்படும் சாயத்தை ஏற்றுகின்றனர். இதனால், அந்த பட்டாணி 'பிரஷ்'ஆக இருப்பது போன்ற தோற்றத்தை பெறுகிறது. இதனை நம்பி பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

நேற்று மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 6.1 கிலோ எடையுள்ள சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றை விற்பனை செய்தவர்களுக்கு 'செக்சன்-55' என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அபராதம் விதிக்கப்படும். இதனை தயாரிப்பவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறோம். அதன்படி, இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு அதிகாரிகள் உக்கடம் மார்க்கெட் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு உணவுப் பொருளில் சாயம் ஏற்றி விற்பனை செய்யும் நபர் சிக்கியவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, இந்த ஆய்வு கோவையில் மேற்கொள்ளப்படும்." என்றார்.

நூடில்ஸ், பிரியாணி உணவுப் பொருட்களுக்கு மேலும் சுவையை சேர்க்கவும், ஆரோக்கியத்திற்காகவும் பட்டாணியை சேர்க்கிறோம். ஆனால், இலாப நோக்கில் செயல்பட்டு, மக்களின் உயிருடன் விளையாடும் ஒரு சில வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

உணவுப் பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் தொடர்பான புகார்களுக்கு 9600873681 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பலாம்.