கோவை : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோவை வருகையையொட்டி, மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் மிக உயர்ந்த பேனர்களும், சாலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோவை வருகையையொட்டி, மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் மிக உயர்ந்த பேனர்களும், சாலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அரசியலும்..! விடாத கட் அவுட் கலாச்சாரமும்..!
தமிழகத்தில் அரசு விழாவாக இருந்தாலும் சரி, தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களாக இருந்தாலும் சரி. பொதுக்கூட்டங்கள், திருமண நிகழ்வுகள் என ஏதுவாக இருந்தாலும் விளம்பர (கட் அவுட், பேனர்கள்) பதாகைகள் என்பது நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகவே உள்ளது. இந்த கட்அவுட்கள், அரசியல் கட்சியினரால் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் என பல்வேறு முக்கிய சாலைகளில் வைக்கப்படுகிறது.

இப்படி சாலைகளில் வைக்கும் பதாகைகளால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளின் கவனங்களும் குறைகிறது. இதனால், பல்வேறு இடங்களில் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளில் நீதிமன்றங்களும் கட் அவுட் பேனர் கலாச்சாரங்களுக்கு தடைகளும் விதித்துள்ளது. ஆனால், இந்தத் தடைகள் யாவும் ஆளும் கட்சியினருக்கு விதிவிலக்காகவே இருந்து வருகிறது.
கோவையில் வரம்பை மீறிய பேனர்கள் :
தமிழக சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் என பலர் கோவை வருகின்றனர். நாளை வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார். ஆகவே, அவரை வரவேற்க கோவை மாவட்டம் முழுவதும் பேனர்களும், மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அவினாசி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலைகளில் பேனர்களும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, விமான நிலையத்தில் தொடங்கிய பிளக்ஸ் பேனர்கள் கோவை மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் பகுதியில் அதிகளவு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 50 அடி உயரமுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோரின் முழு படங்கள் பிளக்ஸ் போர்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களால் அந்தந்த ஊரின் பெயர்களும் மறைத்துள்ளது. இதனால், வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் அவர்கள் செல்ல வேண்டிய குறிப்பிட்ட இடத்திற்க்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.மேலும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் மேடைகள் சாலை வரை இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, ராமநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மேடை சாலை பகுதியின் இடத்தில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதேபோல, ஆம்புலன்ஸ்கள் செல்லும்போது பெரும் சிரமமாகவும் உள்ளது. சாலைபுறத்தில் இருக்கும் விளம்பரப் பலகைகளால் மின்சாரம் இல்லாத நேரங்களில் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்து சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த தாய் செல்வராஜ் என்பவர் கூறுகையில், "சுந்தராபுரம் - பொள்ளாச்சி சாலையானது ஏற்கனவே அதிக போக்குவரத்து நெரிசலும், விபத்து ஏற்படும் பகுதியாகவும் உள்ளது. ஏற்கனவே, இந்த சாலையில் பெரிய பெரிய விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட மோசமான இந்த சாலையில் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது இன்னும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும். பொது நிகழ்ச்சிகளுக்கு என்றாவது ஒருநாள் கூட பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கும் காவல்துறையினர் இத்தனை பேனர்கள் வைக்க எப்படி அனுமதி அளித்தனர்," என்றார்.

மறக்கமுடியாத மரணம் :
கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர்களும், அலங்கார வளைவுகளும் மென் பொறியாளர் ரகு என்ற இளைஞரின் உயிரைப் பறித்தது. பின்னர், இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று பேனர், பிளக்ஸ்கள் வைக்கத் தடை செய்யப்பட்டது. ஆனால், எந்தத் தடை இருந்தாலும் ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைக்க தமிழகத்தில் தடையில்லாத சூழலே நிலவி வருகிறது. அதேபோல, நேற்று முதலமைச்சரின் வருகைக்காக சாலைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ருக்மணி, ராஜேஸ்வரி ஆகியோர் இருசக்கர வாகனம் மோதி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற அவதிப்பு வழக்கு :
இதுகுறித்து சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் கூறியதாவது :- கோவை விமான நிலையத்திலிருந்து ஈச்சனாரி வரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆளுங்கட்சியினர் சுமார் 50 முதல் 60 அடி வரை உயரமுள்ள கட் அவுட்களை வைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சாலைகளில் மிகப்பெரிய ஆர்ச்சுகள் வைக்கக் கூடாது. நடைபாதையை தடுத்து பேனர்கள் வைக்கக்கூடாது. முறையான அனுமதி பெற்று தான் பேனர்கள் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது. அதையும் மீறி எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் விதிகளை மீறி கட் அவுட்டுகள் வைக்கப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த விதிமீறிய கட் அவுட்டுகளால் ஏற்கனவே ரகு என்ற இளைஞரும் பரிதாபமாக பலியானார். நேற்று அந்த ரகுவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை ஆணையாளர் உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் இதுபோன்று பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இந்த பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் உள்ள பேனர்களை புகைப்படம் எடுத்து நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்க உள்ளேன், என்றார்.