கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானதற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானதற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் என பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல்களும் அறியமுடியாத மர்ம காய்ச்சல்களும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக சுகாதார துறையினர் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து கண்காணிப்பதோடு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைகளிலும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் வைரஸ் காய்சல்களுக்கு என்று தனி வார்டுகள் அமைத்து 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு என பிரத்தியேக வார்டுகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 35-க்கும் மேற்பட்ட மெத்தைகள் அமைத்து சிறப்பு மருத்துவ குழுவினர் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் நம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும் பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேரும் சாதாரண காய்ச்சல் காரணமாக 21 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மர்ம காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது.
அதேபோல தாராபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் குழந்தையும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகியுள்ளது.
இந்த மூன்று பேருமே பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் முதியவர் ஒருவர் மட்டுமே பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் இறந்ததாகவும் மற்ற இரண்டு குழந்தைகளும் வேறு காரணங்களால் இறந்ததாகவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் கூறியதாவது:-
ராமமூர்த்தி என்பவர் நேற்று மாலை 7 மணி அளவில் தான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மிக மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டதால் அவரை காப்பாற்ற இயலாமல் போய்விட்டது. அதேபோல தாராபுரத்தை சேர்ந்த பிறந்து 57 நாட்களான குழந்தைக்கு நெஞ்சு சளி காரணமாகவும், பிறந்து 45 நாட்களான தருண் என்ற குழந்தைக்கு மூளையில் ரத்து கசிவு ஏற்பட்டதன் காரணமாகவும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த குழந்தைகள் காய்ச்சலால் உயிரிழக்கவில்லை. நேற்று பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் உயிரிழந்த தேவராஜ் பல்வேறு பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவிட்டு முடியாத சூழலில் தான் கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். ஆகவே காய்ச்சல்கள் ஏற்படும் பொழுது முன்னரே வந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை பெற்றால் பொதுமக்களுக்கு நலம். கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் இறப்பு சதவீதம் குறைவு. தட்ப வெட்ப சூழ்நிலை காரணமாக நோய் பரவுதல் தீவிரமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.