நிலம் எங்கள் உரிமை, விவசாயம் எங்கள் வாழ்வாதாரம் : விளைநிலங்கள் வழியாக செல்லும் மின்கோபுரங்களுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு

கோவை : விவசாய நிலங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும், விவசாயிகள் 22-ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.


கோவை : விவசாய நிலங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும், விவசாயிகள் 22-ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். 



தமிழகத்தில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகமும் இணைந்து பல்வேறு உயர்மின் அழுத்த மின்பாதை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இத்திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், உள்ளிட்ட பலமாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்படவுள்ளன. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது கொங்குமண்டல விவசாயிகள் தான். ஏன் என்றால் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் ஈச்சிப்பட்டியில் உள்ள புகலூர் பவர்ஹவுஸில் தான் 200 ஏக்கர் பரப்பளவில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. 

குறிப்பாக, புகலூர் - ராய்கர் வரை, புகலூர்- திருவலம் வரை, புகலூர் - மைவாடி வரை, புகலூர் - அரசூர் வரை, புகலூர் - இடையர்பாளையம் வரை, புகலூர் - திருச்சூர் வரை, இடையர்பாளையம் - மைவாடி வரை என பவர்கிரிட் நிறுவனம் தனது பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொங்கு மண்டலத்தில் விவசாயிகளின் போராட்டம் மற்றும் சட்ட ரீதியான எதிர்ப்பு ஆகியவற்றால் இந்த திட்டங்கள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நகர்ப்புறங்களில் விவசாயம் மறைந்து பல்வேறு தொழில்கள் பெருகி வந்தாலும், கிராமப்புறங்களில் விவசாயம் பாதுகாக்கப்பட்டு பிரதான தொழிலாக உள்ளது. கம்பு, சோளம், ராகி, கரும்பு, திராட்சை, தென்னை, காய்கறி வகைகள் ஆகியவை அதிகளவில் விவசாயம் செய்யப்படுகின்றன. கொங்கு மண்டல விவசாயிகளுக்குக் கடந்த 2 வருடங்களாக தண்ணீர், மின்சாரம், மத்திய அரசின் கெயில் நிறுவனம் எரிவாயு கொண்டு செல்ல விவசாய நிலங்களில் குழாய் பதித்தல், உரம், விதை விலை உயர்வு, வேலை ஆட்கள் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைக்களுக்கு மத்தியில் தான் பல கஷ்டங்களை கடந்து விவசாயம் செய்து வந்தனர்.

இது போன்ற பிரச்சனைகளை ஓரளவு சமாளித்து இனி வரும் காலங்களிலாவது விவசாயம் நிம்மதியாக செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்த கொங்கு மண்டல விவசாயிகளுக்கு, தற்போது விவசாய நிலங்கள் வழியாக மின்கோபுரம் கொண்டு செல்லும் திட்டம் காரணமாக தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

 

இது குறித்து ஏர்முனை இளைஞர் அணி மாநில துணைத் தலைவரும், விவசாய சங்க கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளருமான மு. சுரேஷ் நம்மிடம் கூறுகையில், "விவசாய நிலங்களில் அமைந்துள்ள மின்கோபுரங்களால் சிறு, குரு உழவர்களின் விளைநிலம் துண்டாடப்பட்டு, தென்னை தோப்புகள், மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. இதனால், உழவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. மீண்டும் இது போன்று திட்டங்களுக்காகப் பல தென்னை மரங்கள் வெட்டப்படவுள்ளன. அதுமட்டுமல்ல, இந்த மின்கோபுரங்களால் நிலங்களின் மதிப்பு குறைந்துவிடுகிறது. வங்கிகளில் கடன் தர மறுக்கிறார்கள். புற்றுநோய் அபாயமும் ஏற்படும் என்கிற அச்சமும் உண்டு. 

இதற்கு என்ன அரசாங்கம் இழப்பீடு தந்தாலும் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் விவசாயிகள் பாதிக்கப்படுவர். இதனை தடுக்க மாற்று வழியாக கேபிள் லைன் மூலம் நிலத்திற்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். இதனால், 0.3 சதவீதம் தான் மின்சாரம் இழப்பு ஏற்படும். டவர்லைன் மூலம் மின்சாரம் கொண்டு சென்றால், 10 சதவீதம் வரை மின் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது," என்றார்.

இது குறித்து கோவை சுல்தான்பேட்டை பகுதியில் விவசாயம் செய்து வரும் அருண்குமார் கூறுகையில் “ இப்பகுதியில் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். விவசாயம் செய்ய வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து கடன்களை பெற்றுதான் விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மழை பொய்த்து விடும் காரணங்களால் பயிர்கள் கருகி நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற நஷ்டங்களை அடுத்த அறுவடையில் சரிகட்டி விடலாம். ஆனால், விவசாய நிலங்களில் குழாய் பதித்தல், மின்கோபுரங்கள் போன்றவை நிறுவப்படும் போது விவசாயிகள் நிலங்களை இழந்து தவிக்கின்றோம். அதற்கான உரிய இழப்பீடும் தரப்படுவதில்லை. இது போன்ற திட்டங்களை விவசாயிகளுக்கு பாதிக்காதவாறு அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்,” என்றார். 

இத்திட்டத்தால் கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டி பஞ்சாயத்துக்குட்ட பகுதிகளில் மட்டும் 127 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பஞ்சாயத்திற்கே இப்படி என்றால் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். 



இதனை தடுக்க தமிழகம் முழுவதும் 8 இடங்களில் வி.கள்ளிப்பாளையம் (திருப்பூர்), சுல்தான்பேட்டை (கோவை), மேட்டுக்கடை (ஈரோடு), படைவீடு (நாமக்கல்) வாழப்பாடி (சேலம்), கிளிப்பட்டு (திருவண்ணாமலை), ஆற்காடு (வேலூர்), பென்னாகரம் (தர்மபுரி) ஆகிய பகுதிகளில் விவசாயிகள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் வரும் 22-ம் தேதி நடத்துவது என விவசாய சங்க கூட்டு இயக்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பாக காவல்துறை அனுமதி கிடைக்காததால் நீதிமன்றத்தை விவசாயிகள் தற்போது அணுகியுள்ளனர்.

இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல்தலைவர் என்.எஸ்.பி., வெற்றி, கூறுகையில், "இதுபோன்ற திட்டங்களை மறுஆய்வு செய்து அரசு மாற்று வழியில் அல்லது கேபில்லைன் மூலம் செயல்படுத்த வேண்டும். காத்திருப்பு போராட்டம் தொடர்பாக தனியார் இடங்களில் தான் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் போராட்டம் தொடரும். ஒருவேலை மின்கோபுரங்கள் விவசாய நிலங்களில் பதிக்கப்பட்டால், அதற்கு நிரந்தர இழப்பீடு மற்றும் வருடாந்திர வாடகை தரவேண்டும்," என்றார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடலுக்கு அடியில் கூட கேபிள்லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு இங்கு நெடுஞ்சாலைக்கு அடியில் செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதே விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...