கோவை : கடந்த சில நாட்களாக ஆதரவின்றி சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, ஒன்றரை மாதத்திற்கு பிறகு அவரது பெற்றோரிடம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஒப்படைத்தனர்.
கோவை : கடந்த சில நாட்களாக ஆதரவின்றி சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை, ஒன்றரை மாதத்திற்கு பிறகு அவரது பெற்றோரிடம் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஒப்படைத்தனர்.

காரமடை ஊக்கியனூர் பகுதியில் வசித்து வரும் ஆண்டி மற்றும் சந்திரா தம்பதியரின் மகள் கவிதா (28). இவர் சுமார் கடந்த 5 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், கவிதாவின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதேபோல, ஏழைத் தொழிலாளியின் மகளான கவிதாவிற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு கூட வசதி இல்லாமல் அவரின் பெற்றோர் தவித்து வந்தனர். இப்படியிருக்க கவிதா சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்பு அவரது வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இதனால், மனநிலை பாதிக்கப்பட்ட கவிதா கோவையின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். கிழிந்த நிலையில் அழுக்கு துணியுடன் நகரை சுற்றி வந்த அவர், சாலையில் தன்னை கோபத்துடன் பார்ப்பவர்களை அவ்வப்போது தாக்கியும் வந்தார். இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த கோவை - திருப்பூர் இடையே இயங்கி வரும் பேருந்தின் மீது கல்வீசி தாக்கியுள்ளார். இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது.
பின்னர், தகவலறிந்து வந்த ரேஸ்கோர் காவல்நிலைய ஆய்வாளர் தெய்வசிகாமணி மற்றும் அவருடன் வந்த இரண்டு பெண் காவலர்கள் இணைந்து மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானப்படுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, 'அன்பாலயா மறுவாழ்வு' இல்லத்தை தொடர்பு கொண்டு, மனநிலை பாதிக்கப்பட்ட கவிதாவை அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர், காப்பகத்தினர் பெண்ணுக்கு உரிய மருத்துவம் கொடுத்து மனநிலை சார்ந்த ஆலோசனைகள் வழங்கி அவரை முடிந்தவரை சரி செய்தனர்.

இதனிடையே, கவிதாவை அவரது வீட்டில் ஒப்படைக்கும் முயற்சியாக, அவரை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். அதேபோல, கவிதாவின் வீட்டை கண்டுபிடிக்கும் முயற்சியில், நேற்று காரமடையில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை உறுதிப்படுத்தினர். பின்னர், இன்று ஆய்வாளர் முன்னிலையில் அன்பாலயா காப்பகத்தினர், மனநலம் பாதித்த கவிதாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, மனநலம் பாதித்த பெண்ணுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக காப்பகத்தினர் உறுதி அளித்துள்ளனர்.
மகள் கிடைத்தது குறித்து மனநிலை பாதிக்கப்பட்ட கவிதாவின் தாயார் சந்திரா கூறியதாவது :- நாங்கள் மிகுந்த சிரமத்தில் எனது பிள்ளையை தேடி வந்தோம். ஆனால், எங்கு தேடியும் என் மகள் கிடைக்கவில்லை. இதனால், மனம் உடைந்து போயிருந்தோம். இந்த சூழலில், காப்பகத்தினர் எங்கள் வீடு தேடி வந்து என் மகளை என்னிடம் காண்பித்து விட்டு, இன்று போலீஸ்காரர் முன்னிலையில் என்னிடம் கொடுத்து விட்டனர். என் பிள்ளை கிடைக்கவே மாட்டாள் என சோகத்தில் இருந்த தங்களுக்கு எங்கள் பிள்ளையை திரும்பக் கொடுத்த போலீஸ்காரர்களுக்கும், அதேபோல மருத்துவ உதவிகள் செய்து, மகளை தங்களிடம் ஒப்படைத்த காப்பகத்தினருக்கும் என் மனதார நன்றிகள், இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார்.