கோவை: தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பிரச்சனையில், தமிழக அரசு நேரடியாக தலையிடக் கோரி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை: தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பிரச்சனையில், தமிழக அரசு நேரடியாக தலையிடக் கோரி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக கோவை மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான 7 பஞ்சாலைகளில் 3,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மே 31-ம் தேதி பழைய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் போடாமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
இதனைக் கண்டித்து கடந்த 20-ம் தேதி முதல் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். மண்டல தொழிலாளர் ஆணையரின் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும், நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. நிர்வாகத்தின் அலட்சியத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், தொழிலாளர்களுக்கு ரூ. 15 லட்சம் ஊதிய இழப்பும் ஏற்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, தமிழகத்திலுள்ள தேசிய பஞ்சாலை கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி, தமிழக அரசு நேரடியாக தலையிட்டு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக மாவட்ட வருவாய் துறை அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.