கோவை: பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முக்தி அடைந்ததற்கு அஞ்சலி செலுத்த கோவை வந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
கோவை: பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் முக்தி அடைந்ததற்கு அஞ்சலி செலுத்த கோவை வந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் வளர்ச்சிக்காகவும், சைவ சமையத்தின் எழுச்சிக்காக 70 ஆண்டு காலத்திற்கு மேல் பாடுபட்டவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். தமிழக ஆலயங்களில் தமிழில் தான் வழிபாடு இருக்க வேண்டும் என தன்னை அர்ப்பணித்தவர். பேரூர் மடாலயத்தின் பெருமையை உலகம் முழுவதும் பரப்ப மருதாச்சல அடிகளாரை தன் இளவரசாக்கி உயிரோடு வாழும்போதே சரியான பயிற்சி தந்து மேலை நாடுகளுக்கு அனுப்பி பிரச்சாரம் செய்ய பணித்தார்.
பேரூர் ஆதீனமாக மருதாச்சல அடிகளார் பட்டமேற்பு விழா 10-ம் நாள் குருபூஜையான வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. சைவ சமயத்தையும், தமிழையும், தமிழ் வளர்ச்சியையும் வலியுறுத்தும் மடாலயமாக பேரூர் திகழ்கிறது. தமிழுக்காக உழைக்கும் நான்கு பீடங்களும் இங்கு உள்ளது.
அரசியல்
தமிழக அரசியல் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தமிழகத்தில் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகின்றனர். சில குறைகள் ஆட்சியில் இருக்கத் தான் செய்யும்.
சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தினால் நிதி சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் மாநில அரசுகள் செயல்பட முடியாது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மட்டுமே நிதிகளை மாநில அரசுகள் கேட்டு பெற முடியும்.
பிரதமர் மோடி அனைத்து மாநில அரசுகளுக்கும் தேவையானதை சிறப்பாக செய்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்துவதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன. நிர்வாக சிக்கல்கள் காரணமாக ஓரே மொழி, ஓரே இனம், ஒரே நாடு என்பதை சில மாநிலங்கள் ஏற்கவில்லை. மத்திய அரசு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
சிலை கடத்தல் விவகாரத்தில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் நேர்மையாக பணியாற்றி பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்தார். இதனால் அரசுக்கும் அவருக்கும் மன சங்கடங்கள் சில உருவானது. அது விரைவில் தீரும். நித்தியானந்தா மதுரை ஆதீனத்திற்குள் நுழைய முடியாது.
ஒரு முறை ஆதீனத்திலிருந்து நீக்கப்பட்டால் மீண்டும் அவரைச் சேர்த்து கொள்ள முடியாதது. ஏனெனில் அவர் சாதாரண மனிதரல்ல. அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வழக்கு இருப்பதால் சாதாரண மனிதராகக் கூட மதுரை ஆதீனத்திற்குள் நுழைய முடியாது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் ஊழல் இருக்கத்தான் செய்யும். இதனை ஒழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.