கோவை : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் ஆதினம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 97.
கோவை : உடல் நலக்குறைவால் இன்று காலமான பேரூர் ஆதீன மடாதிபதி சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் உடல் இறுதிச்சடங்குகள் முடிந்து இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.
அடிகளார்
சாந்தலிங்க இராமசாமி அடிகளார் என்பவர் கோயம்புத்தூர் மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் கீழை சிதம்பரம் என்று அழைக்கப்படும் 400 வருடப் பழமையான திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழிப் பேரூராதீனத்தின் குரு முதல்வராக இருந்தார்.

உதகை ஆலமர் செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் திகழ்ந்தார். கொங்கு நாட்டின் சமய சமுதாய வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இவர் பெருந் தொண்டாற்றி வந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக (1972 - 1978) இவர் பணியாற்றினார். அப்போது தமிழ் மொழி வாயிலாகவே அனைத்து அலுவல்களும் நிகழவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டு, தமிழ்க் கல்லூரிகளில் இளங்கலை இலக்கியப் பாடத்தைக் கொண்டுவந்து தமிழ்க் கல்லூரிகளைக் கலைக்கல்லூரிகளுக்கு இணையான நிலைக்கு உயர்த்தினார்.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பேரூர் ஆதீனத்தில் வைக்கப்பட்டுள்ள இவரது உடல், ஆதீனம் முறைப்படி இன்று மாலை இறுதி சடங்குகள் முடிந்து நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.