கோவை: தேனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் மகளான ஸ்ரீஜா என்ற மாணவியை கோவை தனியார் கல்லூரியில் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு நன்கொடையாளர்கள் மூலம் பி.பார்ம் படிக்க வைத்ததையடுத்து, படிப்பை முடிக்க இருக்கும் நிலையில் மாணவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.ர்.
கோவை: தேனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் மகளான ஸ்ரீஜா என்ற மாணவியை கோவை தனியார் கல்லூரியில் ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு நன்கொடையாளர்கள் மூலம் பி.பார்ம் படிக்க வைத்ததையடுத்து, படிப்பை முடிக்க இருக்கும் நிலையில் மாணவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் இறுதியாண்டு படித்து வருகின்றார் ஸ்ரீஜா. அவருக்கு தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையும் உறுதியாகியுள்ளது. தனது 12-ம் வகுப்பில் 1118 மதிப்பெண்கள் எடுத்த ஸ்ரீஜா, அதற்கு மேல் படிக்க வழியில்லாமல் தவித்தார்.
மாணவியின் தாயார் புவனேஸ்வரி, தந்தை முருகேசன் ஆகியோர் கூலி வேலை செய்து வந்த நிலையில், மாணவியின் மேற்படிப்பிற்கு ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபுவிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது, கோவையைச் சேர்ந்த சிலரின் உதவியால் படிக்க வைத்தார் ஏ.டி.ஜி.பி.

தற்போது மாணவி படிப்பை முடிக்கவுள்ள நிலையில் உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள விருந்தினர் அறையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட மாணவி ஸ்ரீஜா, வரும் காலத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு ஏழை மாணவர்களை படிக்கவைப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசுகையில், "இந்த மாணவியின் வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உதவி என்று வருபவர்களுக்கு உதவுவது நல்ல பண்பு. அதுவும் கல்விக்காக கொடுப்பது மிகச் சிறந்தது. இந்த காலத்தில் 100 பேரில் 8 பேர் தான் கல்லூரியில் சேர முடிகிறது. இதற்குக் காரணம் வசதியின்மை. ஆகவே முடிந்த வரை கல்விக்காக உதவி வரும் தலைமுறையினரை முன்னேற்ற உதவுவோம்." என்றார்.
மாணவி ஸ்ரீஜா பேசுகையில், "நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். ஆனால் படித்து முன்னேற வேண்டும் என்ற ஆசை அதிகம். அந்த நேரத்தில் தான் டிகிரி படிக்க சைலேந்திரபாபு சாரை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அவரும் இன்று நான் டிகிரி முடிக்கும் வரை, கோவையில் உதவும் நல்ல உள்ளங்கள் மூலம் உதவினார். இப்படி உதவியில் படித்த நான் நல்ல நிலைமைக்கு விரைவில் வருவேன். அப்போது என்னைப் போல் உள்ள மாணவிகளுக்கு நான் உதவுவேன்." என்றார்.