கோவை : தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் குப்பையில்லா மாநகரங்களுக்கான தரமதிப்பீட்டு பணிகள் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை : தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் குப்பையில்லா மாநகரங்களுக்கான தரமதிப்பீட்டு பணிகள் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது.
வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் குப்பையில்லா தூய்மை நகரங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகின்றது. கடந்த 2017-ம் ஆண்டு 434 நகரங்கள் பங்குபெற்ற பட்டியலில் கோவை 16-வது இடத்தைப் பிடித்தது. 2018-ம் ஆண்டு 4,203 நகரங்கள் பங்கேற்ற பட்டியலில், கோவை அதே 16-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் முதல் 2019-ம் ஆண்டிற்கான 'ஸ்வச் சர்வேக்ஷன்' தரவரிசை ஆய்வுகள் தொடங்கவுள்ளன. மொத்தம் 5 ஆயிரம் மதிப்பெண்கள் கொண்ட இந்த தர ஆய்வில், ஆயிரம் மதிப்பெண்கள் 'ஸ்டார் மதிப்பீடு' அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. இதையொட்டி, அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் குப்பையில்லா மாநகரங்களுக்கான தரமதிப்பீட்டு பணிகள் குறித்த ஒருநாள் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- இந்த ஆண்டிற்கான 'ஸ்வச் சர்வேக்ஷன்' தரவரிசை ஆய்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டார் மதிப்பீட்டு முறை பற்றிய விதிமுறைகள் குறித்து அனைத்து மாநகராட்சி அதிகாரிகளும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளில் செயல்பட்டதைப் போல, இந்த ஆண்டும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு, கோவை மாநகரை குப்பையில்லா தூய்மையான நகரமாக உருவாக்கி, அதிக ஸ்டார் மதிப்பெண் பெற்றிட முயற்சி செய்ய வேண்டும்.

திறந்த வெளியில் அசுத்தம் செய்பவர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரம் முழுவதும் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும், என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு வீட்டிலும் சேகரிக்கப்படும் குப்பையின் அளவைக் கணக்கிட்டு பதிவிடும் நவீன கருவிகள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டன. இவை முதற்கட்டமாக ஆர்.எஸ்.,புரம் குடியிருப்புகளில் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில், மாநகராட்சி அதிகாரிகள், கோவையைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
