கோவை - சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள அன்னூரில் சுமார் 119 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னூர் பெரியகுளம் உள்ளது. இது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அன்னூரில் கனமழை பெய்தால் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் மழைநீர் இந்த குளத்தை வந்தடையும்.
கோவை : அன்னூர் குளத்தில் தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவுநீர் மற்றும் கால்நடை கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தைப் பாதுகாப்பாக வைக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையை அடுத்த சாலையில் அமைந்துள்ள அன்னூரில் சுமார் 119 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னூர் பெரியகுளம் உள்ளது. இது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அன்னூரில் கனமழை பெய்தால் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் இருந்து வரும் மழைநீர் இந்த குளத்தை வந்தடையும்.

இந்த குளத்தில் நீர் நிரம்பினால் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும். 150-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்போது, குளத்திற்கு வரும் நீரின் பாதைகள் சரியான பராமரிப்பு இல்லாததால், முட்புதர்கள், செடிகள் மற்றும் மண்மேடுகளால் மூடப்பட்டு மழைநீர் வருவதற்கு வழி இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அன்னூர் பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தனியார் உணவு விடுதிகளில் இருந்து வரும் கழிவுகள், கோழிக்கழிவுகள் மற்றும் அன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து வரும் கழிப்பிடக் கழிவுநீர் என பல்வேறு கழிவுகள் இந்த குளத்தில் தான் கலக்கின்றன. இதனால், குளம் மாசடைந்துள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் அருள் ராஜ் கூறுகையில், "கழிவுகள் கலப்பதால் குளம் என்பதன் சுவடு இல்லாமல், சாக்கடை கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறிவிட்டது. மேலும், கால்நடைகளின் எலும்புகளும் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. ஆக்கிரமிப்புகளால் குளத்தின் பரப்பு பெருமளவு குறைந்து விட்டது. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
இதனிடையே, அப்பகுதியில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அன்னூர் குளத்தை தேர்வு செய்து பட்டிகள் அமைத்து குளத்தை மேலும் அசுத்தம் செய்து வருகின்றனர். குளத்தில் பன்றிகள் வளர்ப்பு, கழிவுகள் தேங்குவதை தடுக்க தவறியதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்குப் பன்றி காய்ச்சல், டெங்குகாய்ச்சல், மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும், அன்னூர் குளமானது அத்திகடவு - அவினாசி திட்டத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அதனை இப்போதே சீரமைப்பு செய்து தூய்மை காத்து வந்தால், அத்திகடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தும் போது சிரமம் இருக்காது.
இது குறித்து அத்திகடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ் கூறுகையில், "குளத்திற்கு நீர் வரும் பாதைகள் முறையாக சீரமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குளமும் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட வேண்டும். இந்தக் குளம் முழுமையாக நிரம்பினால் அன்னூரின் சுற்றுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும். இதற்கு முதலில் அப்பகுதி மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். அவர்கள் விழிப்புணர்வு அடைந்து குளத்தை பாதுகாக்க முன்வந்தாலே குளம் காக்கப்படும். அரசாங்கமும் குளத்தை காக்க அங்கு நர்சரி அமைக்கப்பட வேண்டும். அதனை பராமரிப்பு செய்யும் போது குளத்தையும் பராமரிப்பு செய்து வர வேண்டும்," என்றார்.

இதேபோல, பொதுப்பணித்துறையின் உதவி பொறியாளர் (மேட்டுப்பாளையம்) பொங்கியண்ணண் கூறுகையில், "தற்போது குளத்தில் யாரும் கழிவுகள் கொட்டுவது இல்லை. அன்னூர் பேரூராட்சியும் குப்பைகளைக் கொட்டுவதை நிறுத்திவிட்டது," எனக் கூறினார்.
குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் என்னதான் விளக்கமளித்திருந்தாலும், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அப்படியேதான் கிடக்கின்றன. எனவே, குவிந்து கிடக்கும் குப்பைகளால் தங்களுக்கு ஏதாவது நோய் பரவிவிடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மேலும், தமிழக சபாநாயகரின் தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் குளத்தின் இந்த அவலங்கள் பொதுமக்களிடையே மிகவும் வேதனையையும் தருகிறது.