கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு கோவை மாநகர பா.ஜ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு கோவை மாநகர பா.ஜ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி வயது முதிர்வு மற்றும் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் டெல்லி யமுனை நதி கரையோரம் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புண்ணிய நதிகளில் கரைக்க பா.ஜ.க., முடிவு செய்தது. அதன்படி, தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட அனைத்து மாநில தலைவர்களுக்கு வாஜ்பாயின் அஸ்தி கொடுக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் கொண்டு வரப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி, மாநிலம் முழுவதும் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வழியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க., அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு பா.ஜ.க.,வினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கோவை மாநகர பா.ஜ.க., அலுவலகத்திலிருந்து அவரது அஸ்தி எடுத்து வரப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாஜ்பாயின் உருவப் படம் கொண்ட வாகனத்தின் பின்னே ஏராளமான பா.ஜ.க.,வினர் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் வழியாக பேரூருக்கு ஊர்வலமாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், கோட்டப் பொறுப்பாளர் ஜி.கே.எஸ்., செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார், கருமுத்து தியாகராஜன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர், பேரூர் படித்துறையில் அஸ்திக்கு சடங்குகள் செய்யப்பட்டது. அங்கிருந்து வாஜ்பாயின் அஸ்தி பொள்ளாச்சி, பல்லடம், திருப்பூர் சென்றடைகிறது. அங்கு அஞ்சலி செலுத்திய பிறகு, காங்கேயம், மொடக்குறிச்சி, ஈரோடு வழியாக நாளை (ஆக.,26) மாலை பவானி கூடுதுறையில் அவரது அஸ்தி கரைக்கப்பட உள்ளது.
