கோவை: கோவையில் மின்னணு கழிவுகளை அகற்ற பிரத்யேக குப்பை தொட்டி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் மின்னணு கழிவுகளை அகற்ற பிரத்யேக குப்பை தொட்டி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பப்படுகிறது. இருப்பினும், குப்பை மேலாண்மை என்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், வார்டு எண். 22-ல் உள்ள பி.எஸ்.என்.எல். பூங்காவில் மின்னணு கழிவுகளை அகற்றுவதற்கென பிரத்யேக குப்பை தொட்டியை 'க்ரீன் எரா ரீசைக்லர்ஸ்' நிறுவனம் மாநகராட்சியோடு இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, க்ரீன் எரா ரீசைக்லர்ஸ் நிறுவனத்தின் பிரசாந்த் ஓமனக்குட்டன் கூறுகையில், "ஈ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகளை அப்புறப்படுத்துவதும், மறுசுழற்சி செய்வதும் உலக அளவில் கடும் சவாலாக உள்ளது. கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் மின்னணு கழிவுகள் மிக அதிகமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. இவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பதிப்புகள் ஏராளம். அவற்றை முறையாக மறுசுழற்சி செய்யவேண்டியது அனைவரின் பொறுப்பு.
எனவே, மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்காக பிரத்யேக தொட்டியை அறிமுகம் செய்துள்ளோம். மாநகராட்சியோடு இணைந்து நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் இவை அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், சேகரிக்கப்படும் மின்னணு கழிவுகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படும்," என்றார்.

முதற்கட்டமாக, பி.எஸ்.என்.எல். பூங்காவில் வைக்கப்பட்டுள்ள இந்தத் தொட்டியை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு, அதன் செயல்முறை குறித்து ஆய்வு செய்தார். மாநகராட்சி அதிகாரிகள், பாரதி பார்க் சங்கத்தினர் ஆகியோர் உடன் இருந்தனர்.