கோவை: கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையும், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து சிந்தாமணி பகுதியில் உள்ள சிக்னல் முன்புறம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
கோவை: கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையும், காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து சிந்தாமணி பகுதியில் உள்ள சிக்னல் முன்புறம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.
சாலை விபத்துகளை தடுக்கும் வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதன்படி, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இன்று காருண்யா பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் இணைந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, சாலை விதிகளை மதித்து வரும் வாகன ஓட்டிகளுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, சிக்னல்களை மதிக்க வேண்டும், வேகத்தைவிட பாதுகாப்பு முக்கியம் என பல வாசகங்கள் இந்த விழிப்புணர்வு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விழிப்புணர்வு முகாம் குறித்து போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் கூறியதாவது :- பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். அதேபோல, மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இந்த ஆண்டு 24,439 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டதில் 14,431 பேரின் ஓட்டுநர் உரிமம் வட்டார போக்குவரத்து துறையால் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றார்.
