திருப்பூர் : நொய்யல் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டிகளை காப்பாற்றுமாறு பொதுமக்களுக்கு உணரச் செய்த தாய் நாயின் செயல், மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்கினங்களுக்கும் இடையே இருக்கும் தாய்மை உணர்வு உண்டு என்பதை வெளிக்காட்டியுள்ளது.
திருப்பூர் : நொய்யல் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டிகளை காப்பாற்றுமாறு பொதுமக்களுக்கு உணரச் செய்த தாய் நாயின் செயல், மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்கினங்களுக்கும் இடையே இருக்கும் தாய்மை உணர்வு உண்டு என்பதை வெளிக்காட்டியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து இல்லாத காலங்களில் தெருவில் வாழும் நாய்கள், ஆற்றின் நடுவே உள்ள பாறைகளின் இடுக்குகளில் தங்குவது வழக்கம். இதில், காசிபாளையம் பகுதியில் உள்ள பாறையில் கடந்த சில நாட்களுக்கு முன் 10 குட்டிகளை ஈன்ற நாட்டு நாய், அவற்றை பாறைகளில் வைத்தே தனது குட்டிகளை வளர்த்து வந்துள்ளது.
இந்நிலையில், நொய்யல் ஆற்றில் நேற்றிரவு நீர்வரத்து அதிகரித்ததால் பாறையை சுற்றி நீர் நிறைந்துள்ளது. இதில், இருந்து தாய் நாய் மட்டும் வெளியேறிய நிலையில், 10 குட்டி நாய்களும் வெளியேற முடியாமல் தவித்துள்ளது. இதனை கண்ட அந்த தாய் நாய் நேற்றிரவு முதல் அப்பகுதியில் குரைத்துக் கொண்டே தவித்து வந்துள்ளது. நாய் தொடர்ந்து பாறையைப் பார்த்து குரைப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் பாறையில் நாய் குட்டிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் நொய்யல் ஆற்றின் நடுவே பாறைகளின் மீது தத்தளித்தபடி இருந்த 10 நாய் குட்டிகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்கப்பட்ட குட்டி நாய்களுக்கு அப்பகுதியினர் பால் உணவு உள்ளிட்டவற்றை சாப்பிடக் கொடுத்தனர். நாய்குட்டிகள் தானே என்று அலட்சியம் காட்டாமல் கடுமையாக முயற்சித்துஇ அதனைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டினர். மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் எடுத்துரைத்தது என்றால் அது மிகையாகாது. அதேபோல, ஒரு நாயின் தாய்மை உள்ளமும் இங்கு போற்றப்பட்டுள்ளது.