டெல்லி: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைப்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் பராமரிப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால், நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், கேரளா அரசின் கோரிக்கையை தமிழக அரசு மறுத்தது. இதற்கிடையே, கேரளாவில் வெள்ளத்தால் நிலைமை மோசமடைந்துள்ளதால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கக்கோரி இடுக்கி பகுதியை சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) விசாரித்தது. அப்போது, அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுப்பிய மனுதாரர் தரப்பை, ஆதாரங்கள் இல்லாமல் சந்தேகம் எழுப்பக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டித்தது. அணை பாதுகாப்பாகவே உள்ளதாகவும் எந்த பயமும் இல்லை என தமிழக அரசு தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்தால் கேரளாவில் நிலைமையை ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என கேரள அரசு சார்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 138 அடியாகக் குறைக்க முடியுமா? என தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியது. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் நிலவரம், தண்ணீர் திறப்பு, இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து நாளை விரிவான அறிக்கை தர துணைக் கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தது.
ஆலோசனை
அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைப்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, இன்று மதியம் 2 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது. அணையின் நீர்மட்டத்தை குறைப்பது தொடர்பாக 2 குழுவும் எடுக்கும் முடிவை தமிழக அரசு மதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.