கோவை: காந்திபுரம் ஆம்னி பேருந்துநிலையம் அருகே போக்குவரத்து காவலர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், தனது தவறை ஒப்புக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கோவை: காந்திபுரம் ஆம்னி பேருந்துநிலையம் அருகே போக்குவரத்து காவலர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர், தனது தவறை ஒப்புக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடவள்ளி விஜயாநகரைச் சேர்ந்த ஜெகதீசனின் மகன் சுதர்சன் (28). இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, போலீசார் வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது, சுதர்சன் குடிபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, போக்குவரத்து விதிகளை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கான அபராதத்தை செலுத்திவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், குடிபோதையில் இருந்த அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பொது இடத்தில் வைத்து போலீசாரை தரக்குறைவாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இதனால், இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரிச்சர்டு, சட்டம், ஒழுங்கு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர், வந்த இரத்தினபுரி போலீசார் குடிபோதையில் இருந்த சுதர்சனை கைது செய்து, அவர் மீது அரசு அலுவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி செல்லுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள இளைஞர் சுதர்சன் "தான் மது போதையில் காவல்துறையிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்கள் கைதட்டியதால் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் மன்னிப்பு கேட்டுள்ளார்". அதேபோல, அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.