கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்கள் இன்று வரையில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது தொடர்பாக விரைவில் தீர்வு காண வேண்டும் என்று சமூக வலியுறுத்துகின்றனர்.
கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர்கள் இன்று வரையில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது தொடர்பாக விரைவில் தீர்வு காண வேண்டும் என்று சமூக வலியுறுத்துகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற ஒரு வதந்தி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவியது. அந்த வதந்தி இன்று வரையில் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல லட்சம் மதிப்பிலான பத்து ரூபாய் நாணயங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து தனியார் நிறுவன பணியாளர் சுகன்யா கூறுகையில், " பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வகிக்கும் விதமாக, அது தொடர்பானது முற்றிலும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஆனாலும், இன்னும் அந்த நாணயங்கள் செல்லுபடியாகாத நிலை உள்ளது. அதனை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் நடத்துனரிடம் பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுக்கும் போது அதை வாங்க மறுக்கின்றனர். செல்லுபடியாகும் நாணயம் தான் என்று அந்த பயணி கூற முற்படும்போது அங்கு பெரிய வாக்குவாதமே நடைபெறுகிறது.
இது குறித்து ஸ்டேசனரி கடை நடத்தி வரும் சின்னராஜ் என்பவர் கூறுகையில், "எங்களிடம் வரும் பத்து ரூபாய் நாணயங்களை வங்கியில் சென்று செலுத்தும் போது, அங்கேயே ஏற்க மறுக்கின்றனர். வங்கி இயந்திரங்களிலும் அந்த நாணயங்களை செலுத்த வழியில்லை." என்றார்.

அரசு தரப்பில் இருந்து பத்து ரூபாய் நாணயங்கள் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே முழுமையாக சென்றடையாததின் விளைவே அந்த நாணயங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான காரணமாக உள்ளது.
சமூக ஆர்வலர் அருள்ராஜ் கூறுகையில், "இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் பேக்கரிகளில் கூட இந்த நாணயங்களை வாங்குவது இல்லை. மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
"நமது மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இது தொடர்பாக முன்னமே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே மக்கள் அந்த நாணயங்களை பயன்படுத்தலாம். யாரேனும் அதனை வாங்க மறுத்தால், அது தொடர்பான புகாரை, ஆட்சியரிடத்தில் மனுவாக அளிக்கலாம். அதன் பேரில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.