திருப்பூர் : நிலவும் கடும் வெப்பம் மற்றும் தீவனப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கறிக்கோழி உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் : நிலவும் கடும் வெப்பம் மற்றும் தீவனப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக கறிக்கோழி உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கறிக்கோழி உற்பத்தித் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஐம்பதாயிரம் பண்ணைகளில் தினந்தோறும் ஐந்து லட்சம் கிலோ கறிக்கோழிகள் இறைச்சிக்காக அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

கறிக்கோழி உற்பத்தித் தொழிலுக்கான மூலப் பொருட்களின் விலையேற்றத்தைக் கணக்கிட்டு பல்லடத்திலுள்ள பி.சி.சி எனப்படும் பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் கமிட்டி தினமும் கூடி கறிக்கோழி இறைச்சிக்கான விலையை நிர்ணயம் செய்வது வழக்கம். இந்நிலையில், கடும் வெப்பம் காரணமாக போதிய தண்ணீரின்றி போனதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை 30% குறைத்துள்ளனர்.
மேலும், கோழிப்பண்ணைத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்களான மக்காச்சோளம், கருவாடு, மீன் கழிவு, சோயா உள்ளிட்ட தீவனப் பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவும் கோழி உற்பத்தியைக் குறைத்துக் கொண்டதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கறிக்கோழி உற்பத்தியாளர்களின் இந்த முடிவால் கறிக்கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கு பண்ணைக் கொள்முதல் விலையாக ரூ.106-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சில்லறை விற்பனை கிலோ ஒன்றுக்கு ரூ.180 முதல் ரூ. 240 வரை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் பண்ணைகளில் உற்பத்தி அதிகரிக்கும் போது கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இருக்கும் என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் தற்போது கறிக்கோழி இறைச்சி இருநூறு ரூபாய் வரை விற்பனையாவது பண்ணையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.