ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது.
தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அ.குமரெட்டியாபுரம் பொதுமக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, போராட்டக்குழு சார்பாக தூத்துக்குடியில் பிரம்மாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
அ.குமரெட்டியாபுரத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை, பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, ச.ம.க. தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் உள்ளிட்டோர் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளை எட்டியது. இன்றும் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நடைபெறும் மரத்தின் அடியில் இன்று 50-வது நாள் என போர்டு எழுதிப் போட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அருகில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் நேற்று மாலை போராட்டத்தில் குதித்தனர். அவர்களது போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 4 நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று காலை கல்லூரிக்கு வந்த தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு வகுப்புகளைப் புறக்கணித்து வெளியே வந்தனர். பின்பு கல்லூரியின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் மாணவிகளும் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினார்கள். இதே போல மற்ற கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என அறிந்து அந்த கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், அ. குமரெட்டியாபுரம் கிராமத்தில் இருந்து திரண்டு வந்த பெண்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு மனு கொடுத்தனர். மேலும், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி மனு கொடுத்தனர்.