கோவை மாநகர காவல்துறையினர் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் விதிமுறைகளுக்கு முரணாக வாகனம் ஓட்டியதாக 2162 வழக்குகளும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 117 பெரும் கைது செய்யப்பட்டனர்.
கோவை, ஜனவரி 19
கோவை மாநகர காவல்துறையினர் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் விதிமுறைகளுக்கு முரணாக வாகனம் ஓட்டியதாக 2162 வழக்குகளும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 117 பெரும் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர காவல்துறை சார்பில் விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று (ஜன.18) இரவு மாநகர் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சாலைவிதிகளுக்கு முரணாக வாகனம் ஓட்டியதாக 2162 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் பெரியய்யா கூறுகையில், "மாநகரில் நேற்று இரவு 12 இடங்களில் பேரிகார்டு வைத்து தடுத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த அதிரடி சோதனையின் போது 63 பழங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சந்தேகத்திற்குரிய 172 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளின் அடிப்படையில், ஆதாயக்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, சுதந்திரமாக சுற்றித்திரிந்த 53 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, சூதாட்டம், போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் மதுவிலக்கு குற்ற வழக்குகள் என பல்வேறு வழக்குகளில் 64 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர, மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் என 2162 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது போன்ற அதிரடி சோதனைகள் கோவையில் அவ்வப்போது நடத்தப்படும். சோதனையின் போது தவிர மற்ற நேரங்களில் பேரிகார்டுகள் சாலையோரங்களில் வைக்கப்படும். குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாகவே இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநகருக்குள் வந்து செல்வோர் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்" என்று அவர் கூறினார்.
கோவை மாநகர போலீசாரின் இந்த அதிரடி ஆக்ஷன் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.