ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, ஜனவரி 18
ஹஜ் மானியத்தை ரத்து செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய மக்கள் ஹஜ் புனித யாத்திரை செல்வதற்காக வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்த மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசிற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் குமரி ஆனந்தன் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஹஜ் மானியத்தை மதவாத பாஜக அரசு ரத்து செய்திருப்பது சரியானது அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் மோடி அரசின் செயல்பாடு மோசமானது. ஹஜ் மானியத்தை திரும்ப வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீலகிரி:-
இதேப்போன்று நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடலிலும் காங்கிரஸ் கட்சியினரால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய மதவாத பாஜக அரசு இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறையினை கையாண்டு வருவதாகவும், இந்த முடிவை பரிசீலனை செய்து மீண்டும் ஹஜ் பயண மானியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த மானியத்தை வழங்காமல் இருந்தால் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.