கோவை, ஜனவரி 7
சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம், சிற்றேடு மற்றும் நல்கை கோரிக்கை வெளியீட்டு விழா K'sir's பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், காங்கயம் கால்நடைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி (SKCRF) மையத்தின் புதிய இணையதளத்தை, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

இவ்விழாவில், நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து, கெளமார மடாலய தவத்திரு குமரகுருபர சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன் பேசியதாவது, 'தமிழகத்தில் நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை சமீபகாலமாக அனைவரும் உணர்ந்து வருகின்றனர். இதற்கு, சென்ற வருடம் நடத்தப்பட்ட இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டமும், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதியின் சட்டபோராட்டமும் முக்கிய காரணங்கள்.' என்று பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து, சிறுதுளியின் நிர்வாக இயக்குநரும், ப்ரிக்கால் நிறுவனத்தின் தலைவருமான திருமதி. வனிதா மோகன், சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் சிற்றேட்டினை வெளியிட முதல் பிரதியை, வெற்றி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், கிளாசிக் போலோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திரு. டி.ஆர். சிவராம் பெற்றுக்கொண்டார். அறக்கட்டளையின் நல்கை கோரிக்கையை திரு. டி.ஆர். சிவராம் வெளியிட, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

விழாவில், 'மரங்களும் மனிதர்களும்' என்ற தலைப்பில், வனத்துக்குள் திருப்பூர் இயக்கத்தின் இயக்குநர் திரு. குமார் துரைசுவாமி உரையாற்றினார். பின்பு, 'பள்ளியில் நாட்டு இன கால்நடை வளர்ப்பு' என்னும் தலைப்பில், கெளமாரம் சுஷீலா பன்னாட்டு உறைவிட பள்ளியின் செயலாளர் திருமதி. லலிதா பிரகாஷ் உரையாற்றினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையதளத்தைப் பற்றி, நிர்வாக அறங்காவலர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி கூறுகையில், 'புதுப்பிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் கால்நடை வளர்ப்பு பற்றிய ஏராளமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை, இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அறிமுகம் செய்யப்பட்ட சில மணிநேரத்தில், ஏராளமான இளைஞர்கள் இணையத்தைப் பார்வையிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறோம்' என்றார்.
விழாவில், K'sir's பள்ளி மாணவர்களின் இசைக் குழு, ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'டக்கரு டக்கரு' பாடலையும், K'sir's பள்ளியின் 10ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் பாடலையும் இசைத்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.