கோவை, ஜனவரி 2
கோவை ரயில் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணியினர் மாநகர காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து இந்து முன்னணியின் நிர்வாக குழு உறுப்பினர் T. குணா செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
கடந்த 2003-ம் ஆண்டு வரை ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தன . ஆனால், புனரமைப்பு பணி நடைபெற்று முடியும் வரை ஆட்டோக்களை ரயில் நிலைய முகப்பு பகுதியில் நிறுத்தும் படி அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், புனரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் கார்பரேட் டாக்சிகளுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட ரயில் நிலைய முகப்பில் ஊட்டி மலை ரயில் எஞ்சின் நிறுவப்பட்டது. இதை தொடர்ந்து ஆட்டோக்களை அப்பகுதியிலும் நிறுத்தக்கூடாது என்று கூறி வரும் ரயில்வே நிர்வாகம் போலீசாரை கொண்டு ஆட்டோக்களை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே ரயில் நிலையத்திற்குள் ஆட்டோக்களை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் போலீசார் ஆட்டோக்களை அப்புறப்படுத்த கூடாது என்றும், அவ்வாறு செய்தால் இத்தொழிலை நம்பியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 40 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.