ரஜினியின் அரசியல் பிரவேசம் : அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் கருத்துக்கள்


டிசம்பர் 31

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு பற்றி தலைவர்கள் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தென்சென்னை மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.அதற்கு முன்பு ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறினார். அவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். அவை பின்வருமாறு :-



திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் :-  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுடைய நீண்டகால எதிர்பார்ப்புக்கு இன்றைக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அதற்காக, எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவை பொறுத்த வரையில், சாதக, பாதகங்கள் பற்றி என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகள் வழியில் நின்று, தன்னுடைய வெற்றிப் பாதையை திமுக நிச்சயம் அடையும்.



துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை உண்டு.

அமைச்சர் செல்லூர் ராஜூ: ரஜினி அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யட்டும். ஆட்சியில் சிஸ்டம் சரியாகவே உள்ளது; எந்த சிஸ்டம் சரியில்லை என்று கூறினால், அதில் தவறிருந்தால் மாற்றிக் கொள்வோம். ரஜினியின் அரசியல் பிரவேசம் அதிமுகவை ஒன்றும் செய்யாது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி: யார் சொன்னாலும் மக்கள் எளிதில் நம்ப மாட்டார்கள். ரஜினியின் பின்னணியில் பா.ஜ., உள்ளதா என்பது போக போக தான் தெரியும். என்றார்.

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: சிஸ்டம் சரியில்லை என ரஜினிசொன்னது அதிமுக அரசை தான். அவர் 25 சதவீதம் மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளார்.என்றார்.



தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் : ரஜினிக்கும், அவரது அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு வாழ்த்துகள் . ஊழலுக்கு எதிராக போராடுவதற்காக கூடுதல் பலம் தற்போது தேவைப்படுகிறது. ஊழலற்ற நிர்வாகத்தை ஆதரிக்கும் ரஜினியின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். ஊழலற்ற நிர்வாகத்தை தான் தமிழகத்தில் நாங்கள் முன்னிறுத்துகிறோம். காலதாமதமானாலும் அந்த முயற்சி வெற்றி பெறும். துணிச்சலாக களமிறங்கியிருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து கொள்கிறேன். களங்கம் இல்லாத களத்தை உருவாக்குவதற்கு தான் களமிறங்கியிருக்கிறேன் என அறிவித்திருப்பதற்கு வரவேற்பு, வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். 2019 தேர்தலில் பாஜக.,வுக்கு ஆதரவாக தான் முடிவெடுப்பார் என்பது எனது யூகம். இவ்வாறு அவர் கூறினார்.



பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி: அரசியலில் நுழைவதாக மட்டுமே அறிவித்துள்ளார். அது தொடர்பாக எந்த விபரமும், அறிக்கையும் இல்லை. அவர் படிப்பறிவில்லாதவர் . ரஜினி அரசியலுக்கு வரும் விஷயத்தை மீடியாக்கள் தான் பெரிதுபடுத்துகின்றன. தமிழக மக்கள் புத்திசாலிகள். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி : ரஜினி வருகையால் மாற்றங்கள் ஏற்படும். அவருக்கு எனது வாழ்த்துகள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறாரோ அதனை செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி., அன்வர்ராஜா: ஒராண்டாக தமிழகத்திற்கு தலைகுனிவு என்ற ரஜினியின் கருத்தை அதிமுக மீதான நேரடி தாக்குதலாக கருதுகிறேன். அவர் கூறியதுபோல் தமிழகத்திற்கு எந்த தலைகுனிவும் ஏற்படவில்லை. என்றார். 



திமுக மூத்த தலைவர் துரைமுருகன்: ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கு ஒன்றும் இல்லை. அரசியல் என்பது பெரிய களம். அதில் நின்று எதையும் எதிர்கொள்ளும் தைரியம் திமுகவுக்கு உள்ளது. என்றார். 



அமைச்சர் ஜெயக்குமார்: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். கட்சிக்கு உரிய அங்கீகாரம், ஆதரவு என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசியலை பொறுத்தவரை மக்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்களின் ஆதரவை கொண்டு தான் ஒருவரின் அரசியலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். ரஜினிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ரஜினி பேட்டியை திசை திருப்ப வேண்டாம். அவர் தனது பேச்சில் அதிமுக என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அது பொத்தாம் பொதுவாக சொன்ன கருத்து. திமுகவை கூட அவர் குறிப்பிட்டிருக்கலாம். அவர் அதிமுக என கூறியிருந்தால், நாங்கள் பதில் சொல்லியிருக்க முடியும். தினகரன் ஹவாலா வழியில்,வழியில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக கூறி தற்காலிகமாக வெற்றி பெற்றுள்ளார். அவர் தொகுதிக்கு செல்லவில்லை. பணம் கேட்டு அவரை மக்கள் தேடி வருகின்றனர். 2 ஜி வழக்கில் கனிமொழி, ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தது மூலம், அவரும் திமுகவுடன் கூட்டு வைத்துள்ளதை தெரிந்து கொள்ளலாம். என்றார். 

அமைச்சர் மணியன் கூறியதாவது: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். மதவாத அரசியலாக இல்லாமல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. என்றார். 

நடிகர் கமலஹாசன் : சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும், அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக. எனக் குறிப்பிட்டுள்ளார். 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் வெளியிட்ட அறிக்கை: எனது சிறந்த நண்பர், சக நடிகர், மனிதாபிமானமுள்ள நபர் ரஜினிகாந்த், அரசியலில் நுழைவதாக அறிவித்துள்ளார். அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.




தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:- சட்டமன்ற தேர்தல் வரும்போது கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறி இருக்கிறார். புத்தாண்டில் அவரது படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்காக அவர் புதுவிதமாக கையாண்டு இருக்கும் விளம்பர யுக்திதான் இது என்றே நினைக்கிறேன். முழுமையாக அரசியலுக்கு வரட்டும். அப்போது பார்ப்போம். என்றார். 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:- ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. அரசியல் குறித்த அவரது அறிவிப்பை சில ஆண்டுகளாகவே பல்துறையைச் சேர்ந்தவர்கள் நியாயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்திலே அரசியல் கட்சியை தொடங்குவதற்கும் அதன் சார்பிலே மக்களை சந்திப்பதற்கும் யாரும் இடையூறாக இருக்க முடியாது. மக்களுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் அங்கீகாரம் பெறலாம். ஆனால் பொது வாழ்க்கை என்று தேர்தலில் நிற்கும்போது இறுதியில் மக்கள் தான் எஜமானர்கள். ரஜினிகாந்தின் கட்சியின் முழு வடிவம் வெளிவர வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மக்கள் பணியையும், கட்சிப் பணியையும் தொடங்க வேண்டும். அது மக்களை சென்றடைய வேண்டும். தனது கட்சிக்கான கட்டமைப்புகளை சிறப்பாக ஏற்படுத்துவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யுனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:- ரஜினி புதிதாக எதுவும் சொல்லவில்லை. அரசியல் சீரழிவுகளை விமர்சித்து இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு அப்போது முடிவெடுப்பேன் என்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவேன் என்கிறார். ஆன்மீக அரசியல் நடத்துவேன் என்கிறார். ஆன்மீகமும், அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களோடு நேரடி தொடர்பு கொண்டது. ஆனால் அதில் போட்டியிட போவதில்லை என்று கூறிஇருக்கிறார். எங்களை பொறுத்தவரை அவரது அறிவிப்பு இன்றைய கூட்டத்தின் மூலம் ரசிகர்களை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையாகவே கருதுகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் : ‘‘தலைவா... வா...வா...’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘அன்றைய ஓட்டப்பந்தய வீராங்கனை தங்க மங்கை பி.டி.உஷா இன்று ஓடினால் ஜெயிப்பது என்பது...?! இது வெறுப்பு அல்ல... நான் நிஜத்தை பேசுகிறேன். மற்றவை கடவுளின் கையில்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கூறுகையில், சரியான வழியில் செல்லும் ரஜினி, அரசியலில் மிகப்பெரிய வெற்றியடைவார். என்றார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...