கோவை, டிசம்பர் 8
பிரீமியர் பேட்மிட்டன் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் 19ம் தேதி முதல் 2018 ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது என சென்னை ஸ்மேஷர்ஸ் அணி உரிமையாளரும் தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த்தின் மகனும் ஆகிய வி. விஜயபிரபாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

பிரீமியர் லீக் போட்டிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது கோவை வந்துள்ளேன்.
இந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை தில்லி, அசாம், அகமதாபாத் மற்றும் லக்னோவைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 5 இந்திய வீரர்கள், 5 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 17 வயதிற்கு உட்பட்டோர் ஒருவர் என வீரர்கள் இடம்பெறுவர். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 26 வீரர்களில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டு இப்போட்டியில் இடம்பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியின் இறுதியில் பி.வி.சிந்துவை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற கரோலினா மரியாவும் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இதில், சென்னை ஸ்மேஷர்ஸ் அணியின் சார்பில் பி.வி.சிந்து கடந்த மூன்று ஆண்டுகளாக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றியும் பெற்றார்.
இந்த ஆண்டு சென்னையில் ஜனவரி மாதம் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் சென்னை அணி சார்பாக பி.வி.சிந்து லக்னோ அணியின் சாய்னா நெஹ்வாலை எதிர்த்து விளையாடவுள்ளார். குறிப்பாக வழக்கத்தைப் போன்று இப்போட்டி 21 புள்ளிகளில் இருந்து மாற்றப்பட்டு 15 புள்ளிகள் என மொத்தம் மூன்று கட்டமாக நடைபெறும்.

இதன் இறுதிப் போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு ரூ. 3 கோடி முதல் பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.5 கோடி ரூபாயும், அரை இறுதியில் பங்கேற்கும் இரு அணிக்கு தலா 75 லட்சம் ரூபாயும் என மொத்தம் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.