டிசம்பர் 07
ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதாகத் தினகரன் தெரிவித்தார்.
ஆர்.கே. நகரில் சுயேட்சையாக போட்டியிடும் தினகரன், தனக்குத் தொப்பி சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். ஆர்.கே. நகரில் மனு தாக்கல் செய்தவர்களில் 29 பேர் தொப்பி சின்னத்தைக் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று (டிச.,7) நடந்தது. அப்போது, நமது கொங்கு முன்னேற்றக் கழகம் கட்சி வேட்பாளர் ரமேஷ், எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் கேசவலு, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி ஆகியோர் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கேட்டனர். முடிவில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
பதிவு செய்த கட்சிகள் கேட்டதால், சுயேட்சையாக போட்டியிடும் தினகரனுக்குத் தொப்பி சின்னம் ஒதுக்கப்படாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தினகரன் கேட்ட கிரிக்கெட் பேட் மற்றும் விசில் சின்னங்களும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தினகரனுக்குக் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது: எந்தச் சின்னம் ஒதுக்கியிருந்தாலும் நான் போட்டியிட்டிருப்பேன். இறுதியாகத் தாய்மார்கள் விரும்பும் குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் எனக்கு ஒதுக்கியுள்ளது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.