கோவை, அக்டோபர் 31: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நில நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்படும் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு சைமா தலைவர் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் தொழில் துறையினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை மனுக்களை ஏற்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த வாரம் ஒரு உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டி விமான நிலைய விரிவாக்கத்தை துரிதப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 28ம் தேதியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் திருமதி. கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நில நிர்வாக ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு, அந்த குழு நிலம் கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் திரு. பி.நடராஜ், தமிழக முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வியாபார மற்றும் தொழிற்துறைக்கு மையமாக விளங்கிவரும் நிலையில், வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கு வசதி இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. இதனால், வர்த்தகத்தை மேம்படுத்த முடியாத நிலை உள்ளது.
தமிழகம் ஜவுளித் தொழிலில் மூன்றில் ஒரு பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் 70 சதவிகிதம் உற்பத்தி மற்றும் வர்த்தகம் கோவை பகுதியில் உள்ளது. கோவைக்கு வெளிநாட்டு விமான போக்குவரத்து வசதி கிடைக்கும்பட்சத்தில் நேரமும், பணமும் மிச்சமாகும். விமான நிலைய விரிவாக்கத்தின் மூலம் கோவை தொழிற்துறை வளர்ச்சியடைந்து புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இவ்வாறு சைமா தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.