கோவையில் 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளர் என்ற அடிப்படையில், வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் தடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பன்னீர்மடை ஊராட்சியில் இன்று (அக்.,24) ஒவ்வொரு வீடு வீடாக சென்று டெங்கு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் தெரிவிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின்படி, கோவை மாவட்ட நிர்வாகம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல் மற்றும் ஒழிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதுடன், டெங்கு காய்ச்சல் உண்டாவதற்குண்டான காரணிகளும் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றது.

இயற்கைமுறையில் நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், நகர்புற பகுதிகளிலும், கிராமங்களிலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தொடர் கண்கானிப்பு மேற்கொள்ளுதல், 50 வீடுகளுக்கு ஒரு டெங்கு ஒழிப்பு பணியாளர் என்ற அடிப்படையில், வாரந்தோறும் அனைத்து வீடுகளிலும் ஏடிஸ் கொசுப்புழு வளரும் சூழல் உள்ள இடங்களாக அறியப்படும், மேல்நிலை மற்றும் கீழ்நிலைத் தொட்டிகள், திறந்த டிரம்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள், தேவையற்ற ஆட்டுக்கல் போன்றவற்றையும் கண்டறிந்து அப்புறப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், பொதுமக்களுக்கு தங்களது வீடுகளை சுத்தமாகவும், ஏடிஸ் கொசுப்புழு வளரிடங்களை ஒழிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் சுகாதாரதம் காத்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாய்வின்போது உதவி இயக்குநர் (ஊராட்சி) பத்மாவதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பானுமதி உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர்.