உடுமலை அருகே ஆமினி பேருந்து- வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கேரள மாநிலத்தில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக வேன் மூலம் பயணித்தனர்.
வேன்-ஐ திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜீவானந்தம் (30) என்பவர் இயக்கி வந்தார்.
இந்நிலையில், வேன் உடுமலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆமினி பேருந்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் ஓட்டுனர் ஜீவானந்தம் உட்பட வேனில் இருந்த ரங்கராஜ் (40), காமாட்சி (40) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், ஆமினி பேருந்து மற்றும் வேனில் பயணித்த 32 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த 8 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். மற்றவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.