பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதிமன்ற கட்டண உயர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் துணைத் தலைவர் நந்தகுமார் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு அமைப்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை தேர்வு செய்ய பொதுவான தேர்வு முறையை கொண்டுவர பரிந்துரை செய்தது. அவ்வாறு செய்தால், தமிழக நீதிபதிகள் வடநாட்டிற்கும், அங்கிருக்கும் நீதிபதிகள் தமிழகத்திற்கும் வர வாய்ப்புள்ளது.
அவ்வாறு நிகழ்ந்தால், சாட்சிகளை விசாரணை செய்யும் போது மொழி அடிப்படையாக பல்வேறு இடர்பாடுகள் எழக்கூடும். எனவே அப்பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் பல்வேறு விதமான சேவைகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது, இந்த கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஒரு வருட காலத்திற்குள் வாங்காத நேரத்தில் அவற்றை குற்றவியல் நீதிமன்றம் மூலமாகவே பெற முடியும். ஆனால், தற்போது அந்த அதிகாரத்தை வட்டாட்சியரிடம் கொடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு- புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
எங்கள் கோரிக்கைகளை வரும் 31-ம் தேதிக்குள் ஏற்காதபட்சத்தில் அமைப்பின் மூலம் குழுவினைக் கூட்டி, கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு நந்தகுமார் கூறினார்.