ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக முகநூல் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கோவையில் இருக்கும் இளைஞர்கள் கருத்து பதிவு செய்தது தொடர்பாக கோவை, கரும்புக்கடை மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரிடம் தேசிய புலனாய்வு துறையினர் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று மாலை விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கொச்சி நீதிமன்ற அனுமதி பெற்று இன்று கோவையில் கரும்புகடை ஆசாத் நகர் மற்றும் உக்கடம் ஜி.எம் நகர் பகுதிகளில் தீடீர் சோதனை நடத்தினர். தேசிய பாதுகாப்பு முகமை பிரிவில் உள்ள ஏ.டி.எஸ்.பி செளகத் அலி என்பவர் தலைமையில் 13 அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த சோதனையானது நடத்தப்பட்டது.

கோவை கரும்புகடை பகுதியில் உள்ள ஆசாத் நகர் பகுதியில் முகமது அப்துல்லா என்ற இளைஞரிடமும், உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் உள்ள அப்துல் ரகுமான் என்ற இளைஞரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாலை 5 மணிக்கு துவங்கிய விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது. வீடு, கடை என அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இரு இடங்களில் இருந்தும் இரண்டு லேப்டாப்கள், 77 டிவிடிகள், 5 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.
அதில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் அப்துல் ரகுமான் மற்றும் முகமது அப்துல்லா ஆகிய இருவரையும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைத்தனர். இருவரும் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் அவர்கள் இருவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன், டிவிடி போன்றவற்றை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.