கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இருபதாவது வார களப்பணியில் கலந்து கொண்ட தன்னலமற்ற தன்னார்வலர்களின் சேவையை சிறப்பிக்கும் பொருட்டு இதுவரை நடைபெற்ற களப்பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சுந்தராபுரம் ஆனந்தாஸ் உணவகத்தில் உள்ள மகிழம் அரங்கில் நடைபெற்றது.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை கோவையில் உள்ள பேரூர் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், செங்குளம், சுண்டக்காமுத்தூர் வரலாற்று சிறப்பு மிக்க கிணறு, குனியமுத்தூர் வாய்க்கால், மலுமிச்சம்பட்டி குட்டை என அனைத்திலும் அதிகம் காணப்பட்ட குப்பை, சீமைகருவேல மரங்கள், புதர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், குளங்களை தூர்வாரியும் வருகின்றனர்.
இந்த களப்பணியில் வாரந்தோறும் அதிக அளவிலாக தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தூய்மை பணியை செய்து வருகின்றனர். மேலும், இப்பணிகளில் நமது கோவை நமது பசுமை, இ.எஸ்.ஐ அமைப்பு, தமிழ் பவுண்டேஷன் கனடா, கேமரூன் உற்பத்தி நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து தூய்மை பணியை செய்தும், குளங்கள் பாதுகாக்க நிதி உதவியும், பொருளுதவியும் செய்து வருகின்றனர்.
எனவே, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு துவங்கப்பட்டு இன்றுவரை நடைபெற்ற களப்பணியோடு இருபது வாரங்கள் தொடர்ந்து பொதுமக்களும், தன்னார்வலர்களும் களப்பணியாற்றி வருவதைத் தொடர்ந்து இவர்களை சிறப்பிக்கும் வகையிலும் மேலும் தொடர் பணியாற்றுவது குறித்தும் இந்த கலந்தாய்வில் பேசப்பட்டது. இதில், தன்னார்வலர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் தன்னார்வலர்களும் வீடியோ மூலமாகவும் கலந்துரையாடினர்.

இந்த கலந்துரையாடல், நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாங்கள் இது போன்ற சமூக சேவையில் ஈடுபட்டு வருவதைப் பற்றியும், கோவையில் நீர்வளம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பது போன்ற முக்கிய தகவல்கள் குறித்தும் பேசினர். மேலும் இந்த களப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு, சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.