கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மாநகராட்சி சார்பில் கோவையில் காற்று மாசுபடுவதை கண்காணிக்க 30 இடங்களில் நவீன கருவிகள் அமைக்கப்படுகிறது.

மத்திய அரசு கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் 25–ந் தேதி இந்தியாவில் 60 நகரங்கள் திறன்மிகு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) தேர்ந்தெடுத்து அறிவித்தது. அதில் கோவை மாநகரமும் ஒன்று. மத்திய அரசு திறன்மிகு நகரங்களை தேர்ந்தெடுத்து வருகிற ஜூன் 25ம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்தியா முழுவதும் உள்ள 60 திறன்மிகு நகரங்களில் அதன் திட்டங்களை டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி கோவையில் இலவச வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' திட்டம், 'சிட்டிசன்ஸ் ஆப்', போன்ற திட்டங்கள் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டங்களில் ஒன்றான காற்று மாசுபடுவதை கண்காணிக்கும் கருவிகளின் செயல்பாடுகள் கோவையில் 30 இடங்களில் தொடங்கி வைக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட ஆய்விற்காக இந்த காற்று மாசுபடுவதை கண்காணிக்கும் கருவி அதிக அளவில் வாகனம் வந்து செல்லும் பகுதியான உக்கடம் பெரிய குளம் பகுதி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இக்கருவி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கோவையில் முக்கிய 30 இடங்களில் வரும் ஜூன் 25ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி கூறுகையில்:- கோவை மாநகரில் முக்கிய சிக்னல் சந்திப்புகளான ஹோப் காலேஜ், உக்கடம் பஸ் நிலையம் முன்பு, லட்சுமி மில் சந்திப்பு உள்பட 30 இடங்களில் இந்த கருவி அமைக்கப்படுகிறது.
சிக்னல் சந்திப்புகளில் இந்த கருவியை வைக்கப்படுவதால், வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, கந்தகம் போன்ற நச்சு வாயுக்கள் எந்த அளவு காற்றில் கலந்துள்ளன? என்பதை இந்த கருவி கண்டறியும்.
கோவை நகரில் காற்று இரண்டு முறைகளில் மாசுபடுகிறது. ஒன்று வாகனங்கள் விடும் நச்சு வாயுக்கள் மூலம், அடுத்து தொழிற்சாலைகள் விடும் நச்சுவாயுக்கள். கோவையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால் வாகனங்களின் புகை மூலமே காற்று மாசுபடுகிறது. இதை அளவிடுவதற்காக தான் இத்தகைய கருவிகள் பொருத்தப்படுகின்றன.
நச்சு வாயுக்களால் காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு ஒரே வழி தாவரங்களை அதிக அளவில் வளர்ப்பது தான். அதன்படி சாலையோரம் அதிக செடிகள் வளர்க்க முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் கோவை நகரில் உள்ள சாலைகள் குறுகலாக இருப்பதால் அதில் செடிகள் வளர்ப்பது என்பது இயலாத காரியம். எனவே எங்கெல்லாம் இடங்கள் மற்றும் வாய்ப்பு உள்ளதோ அந்த இடங்களில் செடிகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது சிறிய பூந்தொட்டிகளில் நச்சு வாயுக்களை அதிகம் உறிஞ்சி மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளிவிடும் சிறிய தாவரங்கள் வளர்க்கப்படும். இந்த செடிகள் வாகனங்கள் வெளிவிடும் நச்சுவாயுக்களை உறிஞ்சும்போது அந்த இடத்தில் காற்று மாசுபடுவது குறையும்" இவ்வாறு அவர் கூறினார்.