கோவை மாவட்டம், காரமடை அடுத்துள்ள முள்ளேபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (62). இவருக்கு வீரம்மாள் (55) என்பவருடன் திருமணம் நடைபெற்று மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 25 வருடமாக பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.
இதனிடையே, கடந்த 8 வருடத்திற்கு முன்பு தனியார் விடுதியில் கூலிவேலை செய்துவரும் சந்திரா என்பவரை ராஜேந்திரன் இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று ராஜேந்திரன் மற்றும் சந்திரா ஆகிய இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சந்திராவின் மீது கல்லைப் போட்டு ராஜேந்திரன் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரமடை காவல்துறையினர் சந்திராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.