திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி போரட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சாமளாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி அப்பகுதி பொதுமக்கள் சாமளாபுரம் - மங்களம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அவ்வழியே வந்த சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து என்ன செய்வது எனத்தெரியாத அவர், டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தானும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து மக்களுடன் அமர்ந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு அதிகளவு போலிசார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் பொதுமக்கள் போராட்டத்தினை தொடர்ந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த கலவரத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை திருப்பூர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கன்னத்தில் அறைந்தார். நாடுமுழுவதும் இந்த பிரச்சனை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்,
கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பாக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு அவருக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கியுள்ளது. அரசு நிர்வாகத்தின் இந்த முடிவு சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.