கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்துறையினர் விசாரணைக்காக பிடித்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் கண்டு பிடிப்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் விசாரணைக்காக பிடித்துள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வமான அறிக்கையில், ஒத்தக்கால்மண்டபம், பூங்கா நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில், இரண்டாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வரும் இளவரசன் (18) என்பவர் தனது நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

கடந்த 10.08.2026 அன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை மிரட்டி தாக்கியதுடன், செல்போன் ஒன்றையும் எடுத்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இளவரசன் அளித்த புகாரின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் குற்ற எண் 309/2026-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், கல்லூரி மாணவரான அமுதன் (19) என்பவரும் அச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவர் என தெரியவந்தது. இந்நிலையில், அதே நாள் காலை சுமார் 8.30 மணியளவில் அமுதனும் அவரது நண்பர் ஸ்ரீமன் (19) என்பவரும் மலுமிச்சம்பட்டி அருகே தங்களது கல்லூரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலையில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்புடன் தொடர்புடைய சிலர், அமுதனை அச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் ஒருவராக அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமுதன் மற்றும் ஸ்ரீமனை வழிமறித்த அவர்கள், இருவரையும் ஹிந்துஸ்தான் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் அமுதன் சுமார் காலை 10 மணியளவில் தனது அறைக்குத் திரும்பியுள்ளார். பின்னர், மதியம் சுமார் 3 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையின்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீமன் அளித்த புகாரின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் விசாரணைக்காக பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை அடையாளம் கண்டு பிடிப்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், அமுதன் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல், அன்று அதிகாலை பூங்கா நகர் பகுதியில் நடைபெற்ற முந்தைய தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகவும், அந்தச் சம்பவத்தில் அமுதனுக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பின் காரணமாகவும் நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும், அமுதன் கடந்த மாதம் கல்லூரி விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரி விடுதியில் பணியாற்றிய சமையலர் ஒருவரை அமுதன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அவரை விடுதியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆழியாறு அணையில் 59.65 அடி,...