நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 15-வது ‘உதகை ரோஜா கண்காட்சி 2017’ இன்று தொடங்கியது.

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த 15-வது ஆண்டு கண்காட்சியை சிறப்பிக்கும் விதமாக 31 ஆயிரம் ரோஜா மலர்களால் 15 அடி நீளம் மற்றும் 10 அடி உயரம் கொண்ட ரோஜாவின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழர்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியத்தை காட்சிப்படுத்தும் விதமாக 7 பரதநாட்டிய முத்திரைகளுடனான பெண் உருவ அமைப்பை, உதகை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலை துறையினர் வடிவமைத்திருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட தோட்ட கலைத்துறையினர் ரோஜாக்களை கொண்டு அல்போன்ட்சா மாம்பழத்தின் உருவ அமைப்பையும், சேலம் மற்றும் மதுரை மாவட்ட தோட்ட கலைத்துறையினர் முறையே ராக்கெட் மற்றும் புறா-வின் உருவங்களையும் வடிவமைத்திருந்தனர். ரோஜாக்கள் மட்டுமன்றி, காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு உருவ அமைப்புகளும், ‘கார்ட்டூன்’ வடிவங்களும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

இக்கண்காட்சியை காண ஊட்டி ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் இக்கண்காட்சி நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
